Arun Vijay: நடிகனா எனக்கு அதுதான் தேவைப்படுது.. அருண் விஜய் பகிர்ந்த சீக்ரெட்!
சென்னை: நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்து இளம் இயக்குநர்கள், முன்னணி இயக்குநர்கள் என்ற பாகுபாடில்லாமல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் என்னை அறிந்தால், தடையற தாக்க, தடம் என மாஸ் காட்டிய படங்கள் அதிகம்.
அடுத்ததாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இந்தப் படம் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அருண் விஜய் ஈடுபட்டு வருகிறார். பாலா இயக்கத்தில் நடித்தது தனக்கு கனவு நனவான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்து கவனம் ஈர்க்கும் கதைக்களங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் இவர் படங்களில் நடிக்க துவங்கினாலும் தற்போதைய நிலையை எட்டிப்பிடிக்க அதிகமான உழைப்பை அருண் விஜய் கொடுக்க வேண்டியிருந்தது. துவக்கத்தில் இவரது படங்கள் அதிகமான கவனத்தை பெறாத நிலையில் அருண்குமார் என்ற தன்னுடைய பெயரை தன்னுடைய அப்பாவின் பெயரையும் இணைத்து அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய கதைத் தேர்வில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.
வித்தியாசமான கேரக்டர்கள்: அஜித்துடன் வில்லனாக நடித்த அருண் விஜய், அந்தப் படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் அதிகமான வரவேற்பை பெற்றார். அஜித்திற்கு சமமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து தடையறத் தாக்க, தடம், செக்க சிவந்தது வானம் என சிறப்பான கதைகளில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை படம் கமர்ஷியலாக இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அதே போன்ற ஜானரில் இவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் அப்படியில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

வணங்கான் படம்: அடுத்ததாக பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், பொங்கல் ரிலீஸ் படங்களில் இந்தப் படம் அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் கதைக்களம் எப்படி அமைந்திருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தின் பிரமோஷன்களில் நடிகர் அருண் விஜய், பாலா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்தப் படத்தில் நடித்தது கனவு நனவான தருணம் என்று அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
கனவு நனவான தருணம்: தான் பாலாவுடன் இணைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட நிலையில், இந்தப் படம் புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளதாக அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார். நடிகனாக இந்தப் படத்தின் தன்னை வேறொரு கோணத்தில் பாலா காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களை கவரும்வகையில் அமைவதையே தான் விரும்புவதாகவும் அப்படி நடித்தால் மட்டுமே ரசிகர்கள் வரவேற்பதாகவும், ரசிகர்கள் யூகிக்க முடியாத கேரக்டர்களே தனது சாய்ஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நடிகனாக தனக்கும் இதுபோன்ற சவாலான கேரக்டர்கள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











