“நூறு நாட்கள் ஓட வேண்டிய அவசியம் இல்லை, இரண்டு நாள் வசூல் போதும்”: ஆர்யாவின் புது கணக்கு
நெல்லை: ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' திரைப்படம் வரும் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சக்தி செளந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்யா ராணுவ வீரராக நடித்துள்ளார்.
இந்நிலையி;, தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணைந்த கூட்டணி
ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்தாண்டு ஹாட்ஸ்டர் ஓடிடியில் வெளியான 'டெடி' திரைப்படத்திற்கு, ரசிகர்களிடம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. சக்தி செளந்தர் ராஜன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு, டி இமான் இசையமைத்திருந்தார். 'டெடி' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமான ஆர்யா, சக்தி செளந்தர் ராஜன், டி இமான் கூட்டணி, மீண்டும் கேப்டன் படத்தில் இணைந்தது. ஆர்யா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ராணுவ வீரராக ஆர்யா
ஆர்யா ராணுவ வீரராக நடித்துள்ள 'கேப்டன்' சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேநேரம், ஹாலிவுட்டில் அர்னால்ட் நடிப்பில் வெளியான 'பிரிடேட்டர்' படத்தின் தமிழ் வெர்ஷனைப் போல இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து திங்க் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.

குழந்தைகளுக்கு பிடிக்கும் படம்
இந்நிலையில் நெல்லையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த ஆர்யா செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் "கேப்டன் திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல பல காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக உருவாகியுள்ள கேப்டன், கோலிவுட்டில் புது முயற்சியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் போதும்
தொடர்ந்து பேசிய ஆர்யா, "சிறுவர்களை அதிகமாக கவரக்கூடிய படமாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக அதிக நாட்கள் அடர்த்தியான வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. தமிழகத்தில் திரைத்துறை பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் திரையரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதால் 100 நாட்களில் கிடைக்கும் வசூல், இரண்டே நாட்களில் கிடைத்துவிடுகிறது" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











