சிங்கம்பட்டி ஜமீன் வாரிசிடம் சாரி கேட்ட சார்பட்டா பரம்பரை: 4 ஆண்டுகளுக்கு பின் முடிந்த ஆர்யா வழக்கு!
சென்னை: சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசிடம் நடிகர் ஆர்யா 4 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாலா இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் அவன் இவன். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் இந்தப் படம் காட்சியாக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்தப் படம்.

அவதூறு காட்சிகள்
இந்நிலையில் இந்தப் படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனைதொடர்ந்து சிங்கம்பட்டி ஜமீன் டிஎன்எஸ் தீர்த்தபதி மகன் சங்கராத்மஜன் அம்பா சமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆஜராகவில்லை
இந்த வழக்கு 2018 ஆம் ஆண்டு பாலா, ஆர்யா என இருவருக்கும் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக 2 முறை நேரில் ஆஜரான ஆர்யா அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

ஆஜரான ஆர்யா
இதனால் இந்த வழக்கில் ஆர்யாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திங்கள் கிழமை காலை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு நடிகர் ஆர்யா ஆஜரானார்.

வருத்தம் தெரிவித்த ஆர்யா
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் வழக்கு விசாரணையை பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தார். மீண்டும் பகல் 2 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யா தரப்பில் அந்தக் காட்சியில் நடித்ததற்காக சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு சங்கராத்மஜனிடம் வருத்தம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்யாவை விடுவிப்பு
ஆர்யா வருத்தம் தெரிவித்ததை சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசான சங்கராத்மஜன் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து நீதிபதி கார்த்திகேயன் வழக்கை முடித்து வைத்து இந்த வழக்கிலிருந்து ஆர்யாவை விடுவித்து உத்தரவிட்டார்.

வருத்தமாக உள்ளது
பின்னர் இதுகுறித்து பேசிய நடிகர் ஆர்யா இந்தப் படத்தின் காட்சிகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை என்றார். மேலும் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு சங்கராத்மஜன் மனம் புண்பட்டு இருப்பது வருத்தமாக உள்ளது.

இலங்கை பெண் புகார்
அவரை நேரில் சந்தித்து அந்த காட்சியில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். அதை அவர் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி என்றும் கூறினார். நடிகர் ஆர்யா இலங்கையை பூர்விகமாக கொண்டு ஜெர்மனியில் பணியாற்றும் ஒரு இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்தார் என அண்மையில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











