Bava Lakshmanan - விளம்பரத்திற்காக பாவா லட்சுமணனுக்கு உதவி செய்யவில்லை.. கலக்கப்போவது யாரு பாலா
சென்னை: Bava Lakshmanan (பாவா லட்சுமணன்) வெளியில் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாவா லட்சுமணனுக்கு உதவி செய்யவில்லை என நடிகர் பாலா தெரிவித்திருக்கிறார்.
முன்னணி காமெடி நடிகரான வடிவேலுவுக்கென்று தனி டீம் ஒன்று இருந்தது. அந்த டீமில் அல்வா வாசு, சிங்கமுத்து, பாவா லட்சுமணன், போண்டா மணி என பலர் இருப்பார்கள். இவர்களில் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுவுக்கும் பிரச்னை வந்துவிட்டது. அல்வா வாசு உயிரிழந்துவிட்டார். போண்டா மணி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டிருக்கிறார். பாவா லட்சுமணனும் முன்னர் போல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை.
பாவா லட்சுமணன்: வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர் பாவா லட்சுமணன். குறிப்பாக மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் காட்சியில் பெண்ணின் தந்தையாக, 'வா மா மின்னலு' என்ற வசனத்தின் மூலம் வெகு பிரபலமடைந்தார் பாவா லட்சுமணன். அதேபோல் ஏய் படத்திலும் வடிவேலுவுடன் அவர் செய்த காமெடி காட்சிகளும் பிரபலமாகின.

கவிதை சொன்ன பாவா: வடிவேலுவுடன் இணைந்து நடித்து மட்டும் பாவா லட்சுமணன் பிரபலமாகவில்லை. லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் அரிசி நீ என்னை தினமும் தரிசி; பருப்பு என் மேல காட்டாத வெறுப்பு என கவிதை சொல்லும் காட்சியின் மூலமும் பிரபலமடைந்தார். அந்தப் படத்தில் காமெடி காட்சிகளில் மட்டுமின்றி குணசித்திரமாக நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பாவா.
உடல்நலக்குறைவு: இப்படி பல முறை ரசிகர்களை சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை சமீபகாலமாக சோகத்தில் இருக்கிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் பட வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட கூறியிருந்தார். இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் கால் கட்டை விரல் அகற்றப்படது. இதற்கான அறுவை சிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்தது.
உதவிய பாலா: பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தில் இருக்கும் பாவா லட்சுமணனுக்கு கலக்கப்போவது யாரு பாலா 30000 ரூபாய் கொடுத்து உதவி செய்தார். பாவாவுடன் நடித்த வடிவேலு உள்ளிட்டோர் உதவி செய்யாத போது பாலா செய்த உதவி பலரிடமும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது.அதேசமயம் அந்த உதவி செய்யும்போது வெளியான வீடியோவை அடுத்து பாலா இதனை விளம்பரத்திற்காகத்தான் செய்கிறார் என்ற விம்ரசனத்தையும் சிலர் முன்வைத்தனர்.
விளக்கம்: இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் பாலா, "நான் வெளியில் சொல்ல வேண்டும் என்பதற்காக பாவா லட்சுமணனுக்கு உதவி செய்தபோது வீடியோ எடுக்கவில்லை. அவரின் மேனேஜர்தான் நீங்கள் வீடியோ போட்டால் அதன் மூலமாக சிலர் பார்ப்பார்கள். மேலும் சில உதவிகள் கிடக்கும் என்று சொன்னார். அந்த வகையில் ஒரு மருத்துவர் அந்த வீடியோவை பார்த்துவிட்டு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக சொன்னார்.
அவரின் சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாயை கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அந்த அளவிற்கு என்னிடம் வருமானம் இல்லை. நான் யாரிடமும் வாங்கி கொடுக்கவில்லை. என்னிடம் இருந்ததைத்தான் கொடுத்தேன். இன்னும் நான் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், எனக்கு வருவதை வைத்துதான் எல்லாம் செய்ய முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











