Actor Benjamin: வடிவேலு கேரவன்ல இருப்பாரு. நாங்க ரோட்ல நிப்போம்.. பெஞ்சமின் ஆதங்கம்!
சென்னை: நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து புகழ் பெற்றவர். ஏராளமான கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். விஜயகாந்த், ராஜ்கிரண் போன்றவர்களால் வளர்க்கப்பட்டவர் வடிவேலு. இருந்தபோதிலும் அவர் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தவில்லை என்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அவருடன் இணைந்து நடித்துள்ள பல நடிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது வடிவேலுவுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள பெஞ்சமின் வடிவேலு குறித்த தன்னுடைய ஆதங்கங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் வடிவேலு சிறிது ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்கள் அவருக்கு சிறப்பான ரீ என்ட்ரியை கொடுத்துள்ளன. ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் விமர்சனரீதியாகவும் இந்தப் படங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இருந்தபோதிலும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த நடிகர்கள் யாரும் அவர் குறித்து சிறப்பான விமர்சனங்களை பதிவு செய்யாமல் இருப்பது சமீப காலங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

நடிகர் வடிவேலு: நடிகர் வடிவேலு போராடித்தான் தற்போதைய நிலையை அடைந்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. துவக்கத்தில் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்ள சிறிய கேரக்டர்களில் நடித்து பின்னர் படிப்படியாக தன்னை முன்னேற்றிக் கொண்டவர் வடிவேலு. வடிவேலு காமெடிக்காகவே சிறப்பான ஓடி வெற்றிப்படங்களான ஏராளமான படங்கள் அவரது உழைப்பிற்கு சாட்சிகளாக உள்ளன. தனக்கென்று ஒரு காமெடி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதில் ஏராளமான நடிகர்களை பயன்படுத்தி வெற்றிக் கண்டவர் வடிவேலு. அந்த வகையில் கோலிவுட்டில் எராளமான நடிகர்களை கைக்காட்டலாம்.
வடிவேலு குறித்த சர்ச்சை: காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து வெற்றிக் கண்டவர் வடிவேலு. சில காலங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த வடிவேலு, சமீப மாதங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது ரீ என்ட்ரி படங்களாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி, மாமன்னன் போன்ற படங்கள் வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. இந்நிலையில் சமீப காலங்களில் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார் வடிவேலு. குறிப்பாக போண்டா மணி, விஜயகாந்த் மறைவின்போது உள்ளூரில் இருந்தபோதிலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலுவின் செய்கை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு நல்ல மனிதர் கிடையாது: அந்த வகையில் வடிவேலுவுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகர் பெஞ்சமின் தற்போது வடிவேலு குறித்து பேசியுள்ளார். போண்டாமணி, தான் உள்ளிட்ட பல நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு வடிவேலுதான் காரணம் என்றும் அவர் பிறவிக்கலைஞர் என்றும் குறிப்பிட்டுள்ளார் பெஞ்சமின். ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தான் இறப்பதற்கு முன்பு வடிவேலுவை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்று போண்டா மணி விருப்பப்பட்டதாகவும் ஆனால் அவரது ஆசை நிராசையானதாகவும் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
நாங்க ரோட்ல நிற்போம்: படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினாலும் அதுகுறித்து வடிவேலு எதுவும் கேட்கமாட்டார் என்றும் பெஞ்சமின் குற்றம் சாட்டியுள்ளார். நான்கைந்து துணை நடிகர்கள் வடிவேலுவிற்காக காத்திருக்க வேண்டும் என்றும் அதில் ஒருவரை அவர் தேர்ந்தெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் ஒரு நடிகர் மட்டுமே நடிக்க வேண்டிய சூழலில் 5 பேர் வந்தால் தங்களிடம் இருந்து பாதி சாப்பாட்டில் உணவு பறிக்கப்படும் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் வடிவேலு கேரவனில் சென்று அமர்ந்துக் கொள்வார் என்றும் தாங்கள் மர நிழலிலோ சாலைகளிலோ நின்றுக் கொண்டு சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மனம் நோகும்படி பேசமாட்டார்: ஆனால் கேப்டன் விஜயகாந்த் நடிகர்களின் வாழ்க்கை சூழ்நிலையை புரிந்துக் கொண்டு உதவி செய்வார் என்றும் நடிகர் சங்கத்தின்மூலம் அவர் உதவியதை காட்டிலும் தனிப்பட்ட முறையில் அவர் உதவியது அதிகம் என்றும் பெஞ்சமின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கட்சிப்பணிக்காகவும் அவர் யாரை கூப்பிட்டது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். யாரையும் கடிந்து மனம் நோகும்படி விஜயகாந்த் பேசியது கிடையாது என்றும் அவரை பார்க்க போகும் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்த்தவர் அவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











