Bonda Mani On Vadivelu - ஷூட்டிங் ஸ்பாட்டில் வெடிகுண்டு வைத்தார் வடிவேலு - போண்டா மணி ஷாக் தகவல்
சென்னை: Bonda Mani On Vadivelu (வடிவேலு குறித்து போண்டா மணி) நடிகர் வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் வெடிகுண்டு வைத்ததாக பிரபல நடிகர் போண்டா மணி தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா நகைச்சுவையில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை கடுமையாக இறக்கி வைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.

ரீ எண்ட்ரி வடிவேலு: சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் நிச்சயம் விரைவில் அவுட் ஆகிவிடுவார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர்.
மாமன்னன் வடிவேலு: இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. எனவே மாமன்னன் படத்தில் தனது நடிப்பின் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வடிவேலு காத்திருக்கிறார்.

போண்டா மணி பேட்டி: இந்நிலையில் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் போண்டா மணி ஒரு ஷாக் தகவலை வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், "சுந்தரா டிராவல்ஸ் படத்தில் மாப்பிள்ளை காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். பேருந்திலிருந்து வரும் புகையால் நான் கறுப்பாகிவிடுவேன். ஆனால், முதலில் அந்தப் பேருந்தில் இருந்து அதிகம் வராது என்றார்கள். உடனடியாக அதிகம் புகை வர வடிவேலு ஒரு ஐடியா செய்தார்.

வெடிகுண்டு வெடிக்க வைத்தார்: அந்த ஐடியா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதிக புகை வர வைப்பதற்காக நான் நின்ற உடனே வெடிகுண்டை வெடிக்க வைத்தார். அப்போது மருந்தெல்லாம் பயங்கரமாக சிதறியது. இதன் காரணமாக மூக்கின் உள்ளே புகை சென்று ஒரு வாரம் ரத்தும் வடிந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. உடனே வடிவேலு இதற்காகவா இவ்வளவு ரிஸ்க் எடுத்து அதில் நடிச்ச என்று வருத்தப்பட்டார். ஒரு காட்சி நன்றாக வர வடிவேலு எந்த எல்லைக்கும் செல்வார்" என்றார்.
உடல்நலக்குறைவில் போண்டா மணி: 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் போண்டா மணிக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். அந்த சமயத்தில் நடிகர் விஜய் சேதுபதில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உள்ளிட்டோர் போண்டா மணிக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து நேரில் சென்று நலம் விசாரித்தனர். ஆனால் வடிவேலு நேரில் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











