தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக ஒருவர் படம் எடுப்பாரா?.. காட்டமான கங்குவா பட நடிகர்
சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் தோல்வியை அடுத்து பலரும் சூர்யா, சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஒருதரப்பினரோ வேண்டுமென்றே இந்தப் படத்தை தோல்வியடைய செய்துவிட்டார்கள் என்று கூறினார்கள். இந்தச் சூழலில் கங்குவா பட தோல்வி குறித்து நடிகர் போஸ் வெங்கட் காட்டமான கருத்தினை முன்வைத்திருக்கிறார்.
சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி படம் எதுவும் இல்லை. வணங்கான் படத்திலிருந்து வெளியேறிய அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் கமிட்டானார். சிவா இதற்கு முன் இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் சிவா மீது சூர்யா நம்பிக்கை வைத்திருந்தார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ப்ரோமோஷன் ஆரம்பித்தது. அதில் படக்குழுவினர் இஷ்டத்துக்கு பேசினார்கள். சூர்யாவும், ஞானவேல் ராஜாவும் கொஞ்சம் ஓவர் டோஸாகவே பேசினார்கள்.

படுதோல்வி கங்குவா: ஆனால் அவர்கள் பேசிய பேச்சுக்கு ஈடாக படம் ஓடவில்லை. 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் கூறினார். ஆனால் 200 கோடி ரூபாய்கூட வசூலிக்கவில்லை. படம் படுதோல்வியை சந்தித்தது. பலரும் சூர்யா, சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்து ட்ரோல் செய்தார்கள். இந்தச் சூழலில் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த போஸ் வெங்கட் கங்குவா படம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார்.
போஸ் வெங்கட் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "கங்குவா பட சமயத்தில் பலர் என்னிடம் நேர்காணல் கேட்டார்கள்தான். ஆனால் நான் கொடுக்கவில்லை. ஏனெனில் அப்போது நான் பேசியிருந்தால் விவாதப்பொருளாக மாறியிருக்க வாய்ப்பு உண்டு. சினிமா எடுப்பவர் பல்லாயிரம் கோடி முதலீடு போடுகிறார். அப்படி முதலீடு போட்டு மூன்று மணி நேரம் மக்களை சித்ரவதை செய்யவா ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பார். அப்படியெல்லாம் நிச்சயம் நினைக்கமாட்டார்.
சில சமயங்களில் மிஸ் ஆகிவிடும்: ஒருவர் தன்னுடைய அதிகபட்ச கற்பனையை திரையில் சொல்ல முயற்சிக்கிறார். அது சில சமயங்களில் மிஸ் ஆகத்தான் செய்யும். ஒரு படம் ஓடுமா ஓடாதா என்பதை இங்கு யாராலும் கணிக்க முடியாது. அவ்வளவு ஏன், ஒரு படம் ஓடும் ஓடாதா என்பதை சரியாக கணிக்கும் நபர் இருந்தால் அவருக்கு நான் ஒரு கோடி ரூபாய் பணம் தருகிறேன் என்று ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரே கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி என்னுடன் வேலைக்கு வந்துவிடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
அதிகாரம் யார் கொடுத்தது: கங்குவா படத்தை பார்த்துவிட்டு ஒருவர் வருகிறார். வந்தவுடனேயே மைக்கில் டேய் சூர்யா, ஏய் சிவா என்று பேச ஆரம்பிக்கிறார். அந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது. நான் அவரது வீட்டு முன்பு நின்றுகொண்டு அவரது குடும்பத்தாரை திட்டினால் அவர் புகார் கொடுப்பார். அதேபோல் தியேட்டர் முன்பு நின்றுகொண்டு சிவாவையும், சூர்யாவையும் அவர் திட்டிவிட்டார் என்று என்னாலும் புகார் கொடுக்க முடியும். திரைப்பட விமர்சனத்துக்கு வரலாம். ஒரு நடிகரை உங்களுக்கு பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம். விருப்பு, வெறுப்பு இருக்கலாம். அப்படி உள்ள நீங்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்தால் எப்படி நம்புவது" என்றார்.


Click it and Unblock the Notifications











