ஹலோ ஜோசப் விஜய்.. நீங்கள் எல்லாம் ஜீரோ.. மேடையில் வெளுத்து வாங்கிய போஸ் வெங்கட்.. தவெகவினரும் பதிலடி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கும் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். முதல் மாநில மாநாடு, கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, கட்சியின் பொதுக்குழு கூட்டம் என தான் ஏறும் அத்தனை மேடைகளிலும் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்குகிறார். சமீபத்தில்கூட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நேரடியாக விமர்சனம் செய்தது திமுகவினரிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு பலரும் அவருக்கு தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதைபோல் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஹெச். வினோத் இயக்கிவரும் அந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையவிருக்கிறது. இதற்கு பிறகு விஜய்யை பெரிய திரையில் காண முடியாது; அரசியல் மேடைகளில் பார்க்கலாம். எனவே கடைசி முறையாக அவர் ஜன நாயகன் படத்தில் திரையில் தோன்றுவார் என்பதால் அதனை திருவிழா போல் கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செம பிஸி விஜய்: ஒருபக்கம் தனது கடைசி பட ஷூட்டிங்; மறுபக்கம் அரசியல் மீட்டிங் என பிஸியாக இருக்கிறார். முதலில் மாநில மாநாடு, அடுத்ததாக புத்தக வெளியீட்டு விழா மற்றும் பரந்தூர் பயணம் என அரசியல் களத்தில் பம்பரமாக சுழல ஆரம்பித்திருக்கிறார். மாநாடு முதல் பரந்தூர் பயணம்வரை திமுகவை ஓபனாக விமர்சனம் செய்யும் விஜய்; பாஜகவையும் எதிர்த்துவருகிறார். ஆனால் திமுகவை எதிர்ப்பதில் இருக்கும் அவரது காத்திரம் பாஜகவிடம் இல்லை என்கிற பேச்சும் பலமாகவே எழ ஆரம்பித்திருக்கின்றன. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஆளுங்கட்சி செய்யும் தவறை எங்கள் தலைவர் சுட்டிக்காட்டுகிறார் அவ்வளவுதான் என்று தவெகவினர் கூறுகிறார்கள்.
தொடக்க விழாவில் பேச்சு: அண்மையில் அந்தக் கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நடந்தது. அதில் பேசிய அவர், " "நிதி கொடுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை; பெற வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் அதை செய்யாமல் இரண்டு பேரும் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இடையில் நம்ம பசங்க சென்று TVK for TN என்று ஹேஷ்டேக் போட்டு சம்பவம் செய்துவிட்டு வந்தார்கள். முன்பெல்லாம் பண்ணையார்கள் பதவியில் இருந்தார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார் ஆகிவிடுகிறார்கள்" என பல விஷயங்களை 20 நிமிடங்கள் பேசினார். வழக்கம்போல் இந்தப் பேச்சிலும் திமுகவையே அவர் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: விஜய் இப்படி திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்வதையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள் கட்சியினர். சூழல் இப்படி இருக்க தவெகவின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், 'பெயரை சொல்ல பயப்படுகிறேன் என்று சொல்கிறார்கள். திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே. பேச்சில் மட்டும் இருக்கக்கூடாது. செயலிலும் காண்பிக்க வேண்டும். ஒரு படத்தில் லியோவை காணும் லியோவை காணும் என்று நான் சொல்வது போல்; இவர்களோ பெயரை சொல்லமாட்றாரு சொல்லமாட்றாரு என என்னை சொல்கிறார்கள். அதேபோல் இங்கு மன்னர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கும் கடுமையான எதிர்வினையை ஆற்ற ஆரம்பித்திருக்கிறார்கள் திமுகவினர்.
போஸ் வெங்கட்டின் பதிலடி: அந்தவகையில் நடிகரும் திமுகவின் ஆதரவாளருமான போஸ் வெங்கட் நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மேடையேறி பேசிய அவர் விஜய்யை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில், "ஆம் இங்கு மன்னர் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு வரும் கூட்டமெல்லாம் இளைஞர் கூட்டம். ஏனெனில் நீங்கள் நடிகர். நீங்கள் நடிகராக இருக்கும்வரை இந்தக் கூட்டம் கூடும். ஆனால் நீங்கள் உங்களை எம்ஜிஆரோடு ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். நீங்கள் ஒன்றும் எம்ஜிஆர் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டை நானே பேசியிருக்கிறேன். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த சிரஞ்சீவிக்கு என்ன கொடுமை நடந்ததோ அதே கொடுமை உங்களுக்கும் நடக்கும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

ஜோசப் விஜய் அவர்களே: ஜோசப் விஜய் நெருப்பில் கால் வைத்துவிட்டார். சூறாவளியில் தலையை விட்டுவிட்டார். அவர் சரியாக பேசுகிறார் என்று பலர் சொன்னதெல்லாம்தான் இன்று மீம்ஸ்களாக வந்துகொண்டிருக்கின்றன. 14 வயதில் நீங்கள் (விஜய்) உங்கள் தந்தையின் திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள். 16 வயதில் நாம் கதாநாயகனாக மாறினால் என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தீர்ப்பீர்கள். அனைத்தும் உங்களை பற்றி எனக்கு தெரியும். ஏனெனில் நானும் அங்கிருந்துதான் வந்திருக்கிறேன் ஜோசப் விஜய் அவர்களே. இந்த வயதில் வந்து தனக்கு திமுகதான் போட்டி என்று சொல்கிறீர்கள் அதெல்லாம் எந்த வகையில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
நீங்களே ஒரு வாரிசுதான்: நீங்கள் 20 வயதில் நடிக்க வந்தீர்கள். இப்போது 50 வயதாகிறது. இந்த வருடங்களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். அது உங்களுக்கே தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்று சொல்கிறீர்கள். தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை என்ன. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறதா?.. திரைத்துறையில் இதுவரை வந்த எந்தப் பிரச்னைக்காவது போராட்டம் செய்திருக்கிறீர்களா? நீங்கள் ஏன் அதை செய்யவில்லை. பெரிய நடிகர்தானே நீங்கள். பக்கத்து மாநில திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்புக்காக அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது போல் நீங்கள் அந்த முயற்சியை முன்னெடுத்திருக்கலாமேம். வாரிசு அரசியல் என்று சொல்கிறீர்கள். நீங்களே ஒரு வாரிசுதானே. உங்கள் அப்பா, அம்மா, மாமா என அனைவரும் சினிமாவை சேர்ந்தவர்கள்தானே. வாரிசு என்று நீங்கள் பேசலாமா?
நீங்கள் ஜீரோ விஜய்: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்கிறீர்கள். இதெல்லாம் ரொம்ப தவறு ஜோசப் விஜய். விஜய் நல்ல நடிகர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள்கூட விஜய் ரசிகர்கள்தான். அனைவருமே விஜய் ரசிகர்கள்தான். நானேகூட விஜய் ரசிகர்தான். அதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன். இந்த மேடையில் வைத்துக்கொண்டே உங்களை பாராட்டுகிறேன்; ஜோசப் விஜய் நீங்கள் திறமையான நடிகர்தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் நீங்கள் ஜீரோ. அதை எப்போதும் உங்கள் மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்" என்றார். அவரது இந்தப் பேச்சுக்கு விஜய் ரசிகர்களும் தங்களது பதிலடியை சமூக வலைதளங்களில் கொடுத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











