Trisha - த்ரிஷாவுக்கு சூப்பர் ஸ்டார் சப்போர்ட்.. தமிழ் நடிகர்கள் என்னதான் செய்கிறார்களோ?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை): த்ரிஷா விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் தொடர்ந்து மௌனம் சாதித்துவருவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் அறிமுகமான அவர் ரஜினி, விஜய் உள்ளிட்டோருடன் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருந்த அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பும் இருக்கத்தான் செய்தது.

ஆபாச பேச்சு: இப்படிப்பட்ட சூழலில் த்ரிஷா பற்றி ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அவர் அப்படி பேசியதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதிலும் த்ரிஷா பெரும் கோபத்துடன், மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு என்று பேசினார்.
வலுக்கும் எதிர்ப்பு: த்ரிஷா மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, மடோனா, சின்மயி, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் தங்களது காட்டமான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். அதேசமயம் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோர் இதுவரை இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காதது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிரஞ்சீவி சப்போர்ட்: இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி த்ரிஷாவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் கூறிய கண்டிக்கத்தக்க கருத்து எனது கவனத்துக்கு வந்தது. இந்த கருத்து ஒரு கலைஞர் என்பவருக்கு மட்டுமில்லை ஒவ்வொரு பெண்னுக்கும் அருவருப்பானது ஆகும். இந்த கருத்துக்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிக்க வேண்டும், த்ரிஷாவுடன் நான் நிற்கிறேன். இதுபோன்ற கொடூரமான கருத்துக்கு உள்ளான ஒவ்வொரு பெண்ணும் த்ரிஷாவுடன் நிற்க வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் நடிகர்களின் மௌனம்: சிரஞ்சீவியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய விஷயம் வெளியே திறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. தெலுங்கு சினிமாவிலிருந்து ஒருவர் குரல் கொடுக்கிறார். ஆனால் இங்குள்ள நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை. எனில் இவர்கள் பெண்களுக்கு இவ்வளவுதான் மதிப்பு கொடுக்கிறார்களா என ரசிகர்களும் காட்டமாக கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











