சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன போஸ் வெங்கட்.. விஜய்யை தரக்குறைவாக விமர்சித்து பதிவு! ரசிகர்கள் ஷாக்
சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் செயல்படப்போவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி அறித்தார். கட்சி அறிவித்து கிட்டத்தட்ட 9 மாதங்களில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நேற்று அதாவது அக்டோபர் 27ஆம் தேதி நடத்தியுள்ளார். இது நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மேடைப் பேச்சு என்பதால், விஜய் என்ன பேசப்போகின்றார் என்ற ஆவல் பலருக்கும் இருந்தது. இந்நிலையில் விஜய்யின் பேச்சினை கவனித்த பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் விஜய்யை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல், இவர் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை அரசியலுக்கு வரச்சொல்லிவிட்டு, மறுநாள் விஜய்யை தரக்குறைவாக விமர்சித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே கூறியதைப்போல் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இது சினிமா துறையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மறைமுகமாக விமர்சித்தும் வந்தனர். குறிப்பாக விஜய் இன்னும் களத்திற்கு வரவில்லை. மக்களைச் சந்திக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்கவில்லை என பல விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதேநேரத்தில் பல நடிகர்கள் தங்களது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வரும் காலகட்டத்தில் அரசியலுக்கு வந்து இன்றும் கரைசேர முடியாமலும், திரும்பிக் போக முடியாமலும் உள்ளனர். ஆனால் வெகு சிலர் மட்டுமே தங்களது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக ஆக்கிக் காட்டியவர்கள். அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரைக் குறிப்பிடலாம்.
கவனம்: மேற்குறிப்பிட்ட இவர்களுக்கு முன்னரும் பின்னரும் கட்சி தொடங்கிய பலர் இன்றுவரை கரைசேராமல் உள்ளனர். தமிழ்நாடு அரசியல் களம் கடந்த சில தசாப்தங்களாகவே மாறிவிட்டது. குறிப்பாக நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் கொள்கைகள் என்ன? அவர்களின் கள செயல்பாடு எப்படி உள்ளது என்பதையெல்லாம் நன்கு கவனித்துதான் வாக்கு செலுத்துகின்றனர். அப்படி இருக்கும்போது, நடிகர் விஜய்யின் கன்னிப்பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தரக்குறைவான விமர்சனம்: பலரும் அவரது பேச்சு குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பேச்சு குறித்து மிகவும் தரக்குறைவாக விமரசனம் செய்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், “ யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁” என குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா: ஆனால், போஸ் வெங்கட் நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற்ற சூர்யாவின் படமான கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை அரசியலுக்கு வரச்சொல்லி பேசியிருந்தார். சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன, போஸ் வெங்கட், நடிகர் விஜய்யை இவ்வளவு தரக்குறைவாக விமர்சித்துள்ளது என்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. போஸ் வெங்கட் அடிப்படையில் ஒரு தி.மு.க.,காரர் என்பதும் அதனை அவரே பலமுறை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











