Cool Suresh: எனது மகனின் படிப்புக்கு பணம் கொடுத்து உதவிய ஆம்ஸ்ட்ராங் - வேதனையில் பேசிய கூல் சுரேஷ்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் கூல் சுரேஷ் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் உறுதுணையாக இருந்தவர். எனது வீடியோக்கள் எதாவது பார்த்தால் கூட, எனக்கு போன் செய்து, 'என்னப்பா கூலு.. எதேதேதோ வேஷம் கட்டி நடிக்கறயாமே’ எனப் பேசுவார்.

எனக்கு முழு சப்போர்ட்டாக இருந்த அவர் இன்றைக்கு இல்லை எனும்போது மன வருத்தமாக இருக்கின்றது. எனது வீட்டு விஷேசத்திற்கு அழைத்தால் முதல் ஆளாக வந்து நிற்பார். ஆம்ஸ்ட்ராங் விட்டுச் சென்ற பதையை தம்பிகளாக நாங்கள் அதனைத் தொடர்வோம். இந்த ஏரியா மக்களின் கண்ணீரைப் பார்கும்போதே அவருடைய உழைப்பு தெரியும். இந்த ஏரியா மக்களுக்கு மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக போராடக்கூடியவர். தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருபவர். அவர் மரணிக்கவில்லை. அவர் விதைத்துவிட்டுத்தான் போயுள்ளார். அந்த ஆலமரம் பல பேருக்கு உதவிகளைச் செய்யும்.
ஒரு நிமிடத்தில்: உணவு டெலிவரி ஊழியர்களைப் போல் வருபவர்களைப் பார்க்கும்போது நம்மால் அவர்கள் நம்மை வெட்டத்தான் வந்துள்ளார் என்பதை எப்படி யூகிக்க முடியும். ஒரு நிமிடத்தில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. அதனால் நம்மால் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை காப்பாற்ற முடியவில்லை. அவரது மகள் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்திருந்தார். நான் அதில் கலந்து கொண்டேன். ஒருவாரம் முன்பு கூட எனக்கு போன் செய்து ஜாலியாக பேசினார்.
துப்பாக்கி: ஆம்ஸ்ட்ராங் அண்ணனிடம் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. ஆனால் கொலை நடந்த தினத்தில் அவரிடம் துப்பாக்கி இல்லை. விதி இவ்வாறு விளையாடிக்கொண்டு உள்ளது. இருந்தாலும் இதுபோன்ற படுகொலைகள் நடந்திருக்க கூடாது. இனிமேல் இதுபோன்ற படுகொலைகள் நடக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகன் படிப்பு: வெளிநாடுகளிலும் இதுபோன்ற கொலைகள் நடைபெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் அண்ணனிடம் அன்றை தினத்தில் துப்பாக்கியோ அல்லது வேறு எதாவது பொருளோ இருந்திருந்தால் 8 பேர் மட்டும் இல்லை 80 ஆயிரம் பேர் வந்திருந்தாலுமே சுட்டு வீழ்த்தியிருப்பார்கள். அந்த அளவிற்கு வீரம் நிறைந்தவர்கள்தான் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுடன் இருப்பவர்கள். ஆனாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எப்போதும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கக்கூடிய அம்பேத்கரின் பிள்ளைகள். எனது மகனின் படிப்புக்காக பணம் கொடுத்து உதவினார் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். அவர் இல்லாதது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கும் பெரிய இழப்புதான்” என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











