விதைச்சது எம்ஜிஆர்.. விளைச்சது எம்ஆர்..பார்த்திபன் சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு!
சென்னை : மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டாக உருவாகி கடந்த 4 நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.
இந்தப் படம் எம்ஜிஆர், கமல் முதல்கொண்டு அனைவரின் கனவுத் திரைப்படமாக அமைந்திருந்தது.
அவர்களின் கனவுகளுக்கே தற்போது மணிரத்னம் உயிர் கொடுத்துள்ளார். அவருக்கும் இது மூன்றாவது முயற்சியிலேயே சாத்தியமாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது பொன்னியின் செல்வன் படம். பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சில இடங்களில் ரெஸ்பான்ஸ் குறைவாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்ஜிஆரின் முயற்சி
பொன்னியின் செல்வன் கதையை திரைக்காவியமாக்க பலரும் முயற்சி செய்த நிலையில், நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆர் இந்தப் படத்திற்கான முயற்சியை துவங்கினார். இந்தப்படத்தை இயக்கி, தயாரித்து நடிக்கவும் எம்ஜிஆர் திட்டமிட்டிருந்தார். இதற்கான போஸ்டர் அந்த காலத்தில் வெளிவந்துள்ளது.

கமலின் பலிக்காத திட்டம்
இதனிடையே தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிராஜெக்ட் கைவிடப்பட்ட நிலையில், எம்ஜிஆரிடம் இருந்து இதன் உரிமையை பெற்ற நடிகர் கமல்ஹாசனும் சில ஆண்டுகளுக்கு முன்பு 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டார். ரஜினி உள்ளிட்டவர்களை லீட் கதாபாத்திரங்களில் வைத்து அவர் இந்த படத்தை திட்டமிட்ட நிலையில், அதுவும் பலிக்கவில்லை.

உயிர் கொடுத்த மணிரத்னம்
இதனிடையே இவர்களின் இந்த கனவுக்கு தனது மூன்றாவது முயற்சியில் உயிர் கொடுத்துள்ளார் மணிரத்னம். முன்னதாக விஜய், மகேஷ்பாபு உள்ளிட்டவர்களை வைத்து இந்த படத்தை எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று செல்வத்தை அடை காத்து ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

விதைத்த எம்ஜிஆர்
இந்தக் கதையில் ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த கதை எம்ஜிஆர் இயக்கத்தில் உருவாகவிருந்த நிலையில், தற்போது dropped project என்ற தலைப்பில் பார்த்ததாகவும், ஆனால் உண்மையில் எம்ஜிஆர் இந்தக் கதையின் விதையை திரையுலகில் drop செய்துள்ளதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார்.

விதைச்சது எம்ஜிஆர் -விளைச்சது மணிரத்னம்
விதைச்சது எம்ஜிஆர் என்றும் விளைச்சது எம்ஆர் (Mani ratnam) என்றும் இது நமக்கெல்லாம் பெருமை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். நினைத்ததையெல்லாம் முடிக்கும் வல்லமை படைத்த எம்ஜிஆர் நினைத்ததையெல்லாம் தற்போது மணிரத்னம் முடித்துள்ளதாகவும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











