ராயன் ஆடியோ ரிலீசை முடித்துவிட்டு இரவே குபேரா சூட்டிங்கிற்கு கிளம்பிய தனுஷ்.. என்னவொரு டெடிகேஷன்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை காட்டி வருகிறார். தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க துவங்கிய தனுஷ் தற்போது 50 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த 50 படங்களிலும் நடித்து முடிக்க அவரது பயணம் எளிமையாக அமையவில்லை என்பதை நேற்றைய தினம் அவர் தனது ராயன் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய துவக்க காலத்தில் பல விமர்சனங்களை பெற்றதாகவும் ஆனால் அந்த நிலையிலும் தன்னை ஆட வைத்து தன்னுடைய அண்ணன் அழகு பார்த்ததாகவும் தனுஷ் தன்னுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ராயன் படத்தின் மூலம் முதல் முறையாக தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பங்கேற்ற தனுஷ், நிகழ்ச்சியில் பேசி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தன்னுடைய ஆசான் மற்றும் குரு என தன்னுடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவனை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் தான் அடி, உதை, திட்டு என பல்வேறு டார்ச்சர்களை அனுப்புவித்ததாகவும் கூறினார்.
பழி வாங்கிய தனுஷ்: இவை அனைத்திற்கும் பழிவாங்கும் வகையில் தற்போது தன்னுடைய இயக்கத்தில் நடித்த செல்வராகவனை ஒரே காட்சிக்கு பல டேக்குகள் வாங்கி பழிவாங்கி விட்டதாகவும் சுவாரசியமாக பேசினார் தனுஷ். தொடர்ந்து தான் யார் என தனக்கும் தன்னுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் ரசிகர்களுக்கும் தெரியும் என்றும் தன்னை வெறுப்பவர்களுக்கும் விரைவில் தான் யார் என்பதை காலம் புரிய வைக்கும் என்றும் தனுஷ் பேசியிருந்தார். இதேபோல நிகழ்ச்சியில் செல்வராகவன், எஸ்ஜே சூர்யா என படக்குழுவினர் அனைவரும் பேசினார்கள். எஸ்ஜே சூர்யா தொடர்ந்து தனுஷ் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பல சிறப்பான படங்களை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மீண்டும் குபேரா சூட்டிங்: இதே போல செல்வராகவன் பேசுகையில், தான் தனுஷை செதுக்கவில்லை என்றும் தான் கல்லை மட்டுமே வைத்தேன் என்றும் அவரை தன்னை தானே செதுக்கி கொண்டார் என்றும் கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. குபேரா சூட்டிங்கை விட்டுவிட்டு ராயன் படத்தின் இசை வெளியீட்டுக்காக வந்திருந்த தனுஷ், நேற்றைய தினம் ராயன் இசை வெளியீட்டை முடித்துக் கொண்டு நள்ளிரவிலேயே மீண்டும் விமானம் மூலம் குபேரா ஷூட்டிங்கில் பங்கேற்க கிளம்பிவிட்டார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அவரது இந்த டெடிகேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: இந்த மாதத்துடன் குபேரா படத்தின் சூட்டிங்கும் நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியிலேயே குபேரா படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் introduction வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இதனிடையே வரும் 26ம் தேதி ரிலீசாகவுள்ள ராயன் படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்த நிலையில் சர்வதேச அளவில் விருதுகளையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











