430 பேரைக் கொன்ற வயநாடு நிலச்சரிவு.. ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிய தனுஷ்!
வயநாடு: நாட்டையே உலுக்கி வரும் துயரச் சம்பவமாக இருப்பது வயநாடு நிலச்சரிவுதான். 420க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் மகிழ்ச்சியாக வண்ணமயமாக காணப்படும் வயநாடு ஜூலை மாதம் 29ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், காற்றாற்று வெள்ளமும் ஏற்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் பிரதமர் மோடி நேற்று அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அவருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் இருந்தார்.
வயநாட்டில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென இதுவரை தெரியவில்லை. இன்றுடன் 13வது நாளாக மீட்புப் பணிகளும் தேடுதல் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலச்சரிவினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேலும் நிவாரண உதவிகளுக்கு மத்திய அரசிடம் ரூபாய் 2000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

80ஸ் நடிகைகள்: வயநாடு நிலச்சரிவின் காரணமாக மலையாள திரையுலகினைச் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல், தென்னிந்திய திரைப்பிரபலங்கள் பலரும் கேரள அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதியாக வழங்கினர். அதேபோல், திரையுலகில் 80-களில் முன்னணி நடிகைகளாக இருந்த குஷ்பூ, லிசி, மீனா, சுகாசினி ஆகியோர் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி வழங்கினர்.
மோகன்லால், பிரபாஸ்: நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதிக்காக வழங்கினார். அதேபோல், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் ரூபாய் 20 லட்சம் வழங்கினர். தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூபாய் 2 கோடியும், மலையாள நடிகர் மோகன் லால் ரூபாய் 3 கோடியும் வழங்கியுள்ளனர். நடிகர் மம்மூட்டி கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 20 லட்சமும் அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் ரூபாய் 15 லட்சமும் வழங்கினார். மேலும் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இணைந்து ரூபாய் ஒரு கோடி வழங்கினர். நடிகர் அல்லு அர்ஜுன் ரூபாய் 25 லட்சம் வழங்கினார்.

தங்கலான் : தங்கலான் படக்குழுவினர் கேரளாவில் நடத்த திட்டமிட்டிருந்த புரோமோசன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு செலவாகும் என கணக்கிடப்பட்ட தொகையான ரூபாய் 5 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கினார். நடிகர் விக்ரம் ரூபாய் 20 லட்சம் வழங்கியுள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு நடிகர்கள் நிதி உதவி வழங்கினர்.
தனுஷ்: இந்நிலையில் நடிகர் தனுஷ் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியாக வழங்கியுள்ளார். ராயன் படத்தின் வெற்றிக் களிப்பில் உள்ள தனுஷ் நேற்று ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிரியாணி விருந்து போட்டார். இந்நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி ரூபாய் 25 லட்சம் வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான நிதியாக வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











