Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் இணையும் ராயன்.. நிறைவேறும் நீண்டநாள் கனவு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி ரிலீசாகி கல்லா கட்டி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் உடல்நலப் பிரச்சினை காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது.
இதனிடையே சென்னையில் கூலி படத்தின் சூட்டிங் நாளைய தினம் பிரம்மாண்ட செட்டில் நடைபெறவுள்ளதாகவும் இதில் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் -நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெயிலர் 2 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களால் காலம் காலமாக கொண்டாடப்படுபவர். இந்த உயரத்தை எட்டிப்பிடிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன்னுடைய படிக்கற்களாக மாற்றி, தன்னுடைய 73வது வயதிலும் வெற்றி நடைபோட்டு வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஜெயிலர் படம். இந்தப் படத்தை முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் தீலிப்குமார் இயக்கியிருந்தார். இவர்களது கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் மிகச்சிறப்பாக அமைந்தது.
ஜெயிலர் 2 படம்: இந்தப் படத்தை பான் இந்தியா படத்திற்கான மெட்டீரியலாக மிகச்சிறப்பாக உருவாக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். படத்தின் ஒவ்வொரு மொழியிலிருந்தும் நடிகர்களை களமிறக்கியிருந்தார். ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் என ஒவ்வொரு மொழியிலும் இந்தப் படத்தில் நடிகர்கள் இணைந்த நிலையில், அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தற்போது நெல்சன் திலீப்குமார் மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி: தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், இந்தப் படத்தை நிறைவு செய்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை நெல்சன் திலீப்குமார் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை அவர் மேற்கொண்டுவரும் நிலையில், இந்தப் படத்தின் நடிகர்கள், நடிகைகள் குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் முதல் முறையாக நடிகர் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியுடன் இணையும் தனுஷ்?: படத்தில் தனுஷின் கேரக்டர் மிகவும் அழுத்தமாக அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, முதல் பாகத்தில் இணைந்திருந்த நடிகர்களும் இந்தப் படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்துடன் இணைய வேண்டும் என்பது தனுஷின் நீண்டநாள் கனவாக உள்ளது. சமீபத்தில் ராயன் படத்தின் தன்னுடன் இணைந்திருந்த துஷாரா விஜயன், ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்திருந்தது குறித்து தனுஷ், தன்னுடைய பாராட்டை அவரிடம் பகிர்ந்ததாக துஷாரா கூறியிருந்தார். இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் அவரது கனவு நிறைவேறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











