கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. கந்தாரா படத்திற்கு பாராட்டு சொன்ன தனுஷ்!
சென்னை : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான கன்னட படம் கந்தாரா.
கேஜிஎப் படங்களை தொடர்ந்து கன்னட சினிமாவின் முகம் சிறப்பான மாற்றத்தை பெற்றுள்ளது.
அதற்கு கந்தாரா படமும் தற்போது ஒரு சான்றாக அமைந்துள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான நிலப்பிரச்சினையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

மாறிய கன்னட சினிமாவின் முகம்
ஒரு காலகட்டத்தில் ரீமேக் படங்களுக்கான தளமாக இருந்தது கன்னட சினிமா. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் பாகங்களின் ரிலீசையடுத்து தற்போது கன்னட சினிமாவின் முகம் மாறியுள்ளது. தியா, கருட கமனா விருஷப வாகனா, 777 சார்லி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.

கந்தாரா படம்
அந்த வகையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் கந்தாரா. இந்தப் படத்தின் மூலம் பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான நிலப் பிரச்சினைகளை கதைக்களமாக ரசிகர்களை கவரும் வகையிலான திரைக்கதையுடன் கொடுத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

கட்டிப் போட்டுள்ள திரைக்கதை
இந்தப் படத்தின் திரைக்கதை ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. நில அரசியல், பண்ணையார்கள் மற்றும் பழங்குடியின மக்கள் என இந்தப் படத்தில் முக்கியமான விஷயங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. 1847ம் ஆண்டு, 1970ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டு என மூன்று காலகட்டங்களையும் கையில் எடுத்துள்ளார் இயக்குநர்.

3 காலகட்டங்களில் எடுக்கப்பட்ட படம்
தன்னுடைய நிம்மதிக்காக அதிகமான நிலங்களை கொடுத்து, பழங்குடியினரிடம் இருந்து சாமியை வாங்கும் அரசர், தங்களின் நிலங்களை மீண்டும் கேட்கும் பண்ணையார் மற்றும் 1990ம் ஆண்டில் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் நாயகன் என கதைக்களம் விரிகிறது. படத்தில் எருமை மாட்டு போட்டி, சேற்றில் நடக்கும் சண்டை காட்சிகள் போன்றவையும் கவனத்தை பெற்றுள்ளன.

பலத்தை கொடுத்த ரிஷப் ஷெட்டி நடிப்பு
ரிஷப் ஷெட்டியின் நடிப்பு படத்திற்கு சிறப்பான பலத்தை கொடுத்துள்ளது. இதேபோல வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள கிஷோரின் நடிப்பும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே இந்தப் படம் குறித்து தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனுஷ் பாராட்டு
இந்தப் படம் தன்னை மனதளவில் அதிகமாக வசீகரித்துள்ளதாகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார். கந்தாரா படத்தை கொடுத்த ரிஷப் ஷெட்டி கண்டிப்பாக பெருமை கொள்ள வேண்டும் என்றும் தனுஷ் கூறியுள்ளார். படத்தை தயாரித்துள்ள ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் தனுஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர்களுக்கு வாழ்த்து
படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ள தனுஷ், தொடர்ந்து இதுபோன்ற படங்களை கொடுக்கவும் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அசுரன், கர்ணன் போன்ற படங்களில் இதுபோன்ற அழுத்தமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில், அந்தப் படங்களை நினைவுப்படுத்தும் வகையில் கந்தாராவும் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











