Raayan: தவமிருந்து உருவாக்கப்பட்ட ராயன்! ரசிகர்களுடன் பார்த்த தனுஷ் கையெடுத்து கும்பிட்டு நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் தனுஷின் 50வது படம் ராயன். தனது 50வது படத்தினை தனுஷே இயக்கி நடித்தும் உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ளது எனக் கூறும் அளவிற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ளா ராயன் படத்திற்காக தனுஷ்க்கு சூர்யா, கார்த்தி, பாரதிராஜா, அனிருத் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செல்வராகவன்: படம் பார்த்த இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், “ ராயன் படம் பார்த்தேன். படம் குறித்து விளக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் தனுஷ் ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கின்றார். ஒரு அண்ணனாக உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றேன் தனுஷ். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சார், நீங்கள் எங்களை உங்களது இசையால் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். படத்தில் நடித்துள்ள அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார்.
எமோஷனல் ஆன தனுஷ்: படத்திற்காக அதிகாலை 6 மணிக் காட்சிகளுக்கு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று திரையிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதிகாலை 6 மணிக் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். படம் முடிந்த பின்னர் பால்கனியில் இருந்து ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். தனுஷைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் ஆகினர். மேலும் ரசிகர்கள் ராயன் படத்தைக் கொண்டாடியதைப் பார்த்த தனுஷ் தனது இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது நெற்றிக்கு நேராக சில வினாடிகள் கையெடுத்து கும்பிட்ட தனுஷ் கிட்டத்தட்ட எமோஷனல் ஆகிவிட்டார் என்றே கூறவேண்டும்.
முத்தம்: தனுஷைப் பார்த்த ரசிகர் ஒருவர் கீழ் இருந்து பால்கனிக்கு சுவற்றில் ஏறி வந்தார். இதனை எதிர்பார்க்காத தனுஷ் அவரை உடனே கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் ரசிகர்களுக்கு காற்றில் முத்தங்களைப் பறக்கவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை ரோகிணி திரையரங்கத்தினரே அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











