Actor Dhanush: ஜூன் 2ல் நடக்கும் ராயன் பட இசை வெளியீடு.. எங்க நடக்குது தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து சிறப்பான கூட்டணியில் படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் நீண்ட காலங்களுக்கு பிறகு ப பாண்டி படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற ரொமான்டிக் காமெடி படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் முற்றிலும் இளைஞர்களை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ளார் தனுஷ். படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனத்திற்காக தனுஷ் தயாரித்து இயக்கி மற்றும் நடிக்கவும் செய்துள்ளார்.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு திறமைகளுடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட்டிலும் இவரை அடுத்தடுத்த படங்களில் பார்க்க முடிகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்து வரும் தனுஷ், ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகளையும் படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். இந்நிலையில் படம் ஜூன் மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயன் படம்: இந்தப் படத்தின் அடுத்தடுத்து இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. அன்றைய தினமே இந்த படத்தின் ட்ரெயிலரும் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2வது சிங்கிள்: இந்த படத்தில் தனுஷுடன் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான நிலையில், அதில் தனுஷின் ஃபேமிலி குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளன. மொத்தத்தில் குடும்ப செண்டிமெண்டையும் கேங்ஸ்டர் கதைக்களத்தையும் இந்த படத்தில் தனுஷ் இணைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் 2வது படம்: முன்னதாக வயதான நபரின் உணர்வுகளை மையமாகக் கொண்டு ப பாண்டி படத்தை கொடுத்திருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது குடும்ப செண்டிமெண்டையும் சேர்த்து கேங்ஸ்டர் கதைகளத்தில் களமிறங்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களை எந்த அளவில் கவரும் என்பதை இன்னும் சில தினங்களில் பார்க்கலாம். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ், இந்தப் படத்தின் சூட்டிங்கையும் விரைவில் நிறைவு செய்யவுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











