Vijay: ஆணவக்கொலை தொடர்பாக விஜய் பேச மாட்டாரா? ஆவேசமாக கேள்வி கேட்ட நடிகர் தீனா!
சென்னை: சினிமா நடிகர்களிடம் சாதி குறித்து கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, நாட்டை ஆள்பவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் நடிகர் தீனா. மேலும் ஆணவக்கொலை தொடர்பாக எதுவும் பேசாமல் உள்ள நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் ஏன் கருத்து தெரிவிக்காமல் உள்ளார் எனவும் கேள்வி எழுப்பியுளார். சமீபத்தில் நடந்த "காத்து வாக்குல ஒரு காதல்" பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
சினிமாவில் சாதி குறித்த கேள்விகள் எழும்புவது பற்றி தீனா கூறுகையில், "சினிமா நடிகனுக்கு என்ன இருக்கு? சாதி குறித்த கேள்விகளை நாட்டை ஆள்பவர்களிடம் தான் கேட்க வேண்டும். சாதிய முறை நல்லதா கெட்டதா என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார். மேலும் சமூக நீதி விதைக்க அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய தீனா, "சினிமா நடிகர்கள் முதல்வராக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசியலில் இருந்தவர்கள். என்னைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும்? சாதி ஒழிய வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து" என்றார். சாதியை நாம் ஒழிக்கவில்லை என்றால் வன்முறைகள் வெடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தான் ஆணவப்படுகொலைகள். சாதி குறித்த கேள்விகளை நடிகர்களிடம் கேட்பதை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை வைத்தார்.

சமூக நீதி: சமூக நீதியுடன் அனைவரும் ஒன்றாய் வாழ்வதையும், திருமணம் மற்றும் உறவு போன்ற விஷயங்களில் சாதி தலைதூக்குவதையும் சுட்டிக்காட்டினார் தீனா. "நம்மில் எத்தனை பேர் சாதியை தூக்கிப் பிடித்து வருகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் சமூக நீதியுடன் தான் நாம் பழகுகிறோம், சாப்பிடுகிறோம், சேர்ந்து இருக்கிறோம். இந்த ஒற்றுமை நம்மிடையே தொடர வேண்டும் என்றால், சாதியை ஒழித்தால் இன்னும் நல்லது" என்று அவர் கூறினார்.
விஜய்: சினிமா துறையில் அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள் ஆணவக் கொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் தீனா வலியுறுத்தினார். கவின் ஆணவப்படுகொலை குறித்து நடிகராக இருந்து அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும். ஆணவக் கொலை தொடர்பாக அவரிடத்தில் போய் கேளுங்கள். அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? என்றும் கூறினார்.
வட சென்னை: வட சென்னையை வன்முறையாளர்கள் நிறைந்த பகுதியாக சித்தரிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தீனா, அங்குள்ள மக்களின் வாழ்வியலை சரியாகப் படம்பிடிக்க வேண்டும் என்றும், அந்த மண்ணின் மைந்தர்கள் படம் எடுத்தால் தான் உண்மை நிலை தெரியும்இயக்குநர் சொல்வதைத்தான் தான் நடிப்பதாகவும் கூறினார். மேலும், படத்தில் தவறுகள் இருந்தால் கூட இயக்குனரிடம் எடுத்து சொல்வேன் என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











