நடிகர் சங்க விழாவில் பரபரப்பு... மேடையில் காரசாரமாக மோதிய டாப் ஹீரோக்கள்... நடிகைகள் அதிர்ச்சி
Recommended Video
ஐதராபாத்: நடிகர் சங்க விழாவில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் மேடையில் மோதிக்கொண்டதால் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கு நடிகர் சங்கத் தலைவராக இருப்பவர் நடிகர் நரேஷ். துணைத் தலைவராக இருப்பவர் டாக்டர் ராஜசேகர். இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த சங்கத்தின் சார்பில் டைரி வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவியும் மோகன் பாபுவும் கலந்துகொண்டனர்.

உதவிகள்
விழாவில் சிரஞ்சீவி பேசும்போது, நடிகர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சமீபத்தில் ஆந்திர முதலமைச்சரையும் தெலங்கானா முதலமைச்சரையும் சந்தித்தேன். அவர்கள் நடிகர்கள் சங்கத்துக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்து தர தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர் என்று பேசிக்கொண்டிருந்தார்.

மைக்கை பிடிங்கினார்
நடிகர், நடிகைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவரின் கையில் இருந்த மைக்கை பிடுங்கிய நடிகர் டாக்டர் ராஜசேகர், மேடைக்கு வேகமாகச் சென்றார்.

ஏற்க முடியாது
கடந்த நடிகர் சங்க நிர்வாகத்தினர் ஊழல் செய்துள்ளனர். ஆனால், சிரஞ்சீவி அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். இதை ஏற்க முடியாது என்று பேசத் தொடங்கினார். இதனால் நடிகர் சிரஞ்சீவி டென்ஷன் ஆனார்.

அநாகரிகம்
பிரபல நடிகர் மோகன்பாபு, 'இதை ஏற்க முடியாது, ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, இப்படியா அநாகரிகமாக நடந்துகொள்வது?' என்று ராஜசேகரைக் கண்டித்தார். பின்னர் மேடையில் இருந்து இறங்கிய டாக்டர் ராஜசேகர், தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பரபரப்பு
இந்தச் சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜசேகரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் டாக்டர் ராஜசேகர்.

ஒதுங்க முடியாது
இதுபற்றி டிவிட்டரில் அவர், அன்று என்ன நடந்ததோ அது, எனக்கும் தலைவர் நரேஷ் மற்றும் சங்கத்துக்குமானது மட்டுமே. சில விஷயங்கள் சரியாக இல்லாதபோது என்னால் ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

மன்னிப்புக் கேட்கிறேன்
எனக்கும் நடிகர்கள் சிரஞ்சீவிக்கும் மோகன் பாபுவுக்கும் சண்டையோ, தவறான புரிதலோ இல்லை. விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதை தவறாக யாரும் சித்தரிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











