மோசடி மன்னன் உடன் தொடர்பு.. பிரபல பாலிவுட் நடிகையின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் திடீர் முடக்கம்!
மும்பை: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு அவரிடம் அமலாக்கத் துறையினர் பல முறை விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் 7.27 கோடி ருபாய் சொத்தை அமலாக்கத் துறையினர் அதிரடியாக முடக்கி உள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜாக்குலின் ஃபெர்னண்டஸுக்கு இதனால் பெரும் சிக்கல் உருவாகி உள்ளது.

இலங்கை நடிகை
இலங்கையில் பிறந்து வளர்ந்து நடிகையாக வலம் வந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்க்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்ததே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தான் என பாலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் 212 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதில் இருந்தே அவருக்கு மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன.

மோசடி மன்னன் உடன் டேட்டிங்
அலாதின் படத்தின் மூலமாக பாலிவுட்டில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். ஹவுஸ்ஃபுல் சீரிஸ், சல்மான் கானின் கிக் உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்துள்ள இவர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் டேட்டிங் செய்ததாக வந்த தகவல்களை ஆரம்பத்தில் அப்பட்டமாக மறைத்தார். ஆனால், பின்னர் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், விசாரணை வலையில் வசமாக சிக்கிக் கொண்டார்.

தப்பிக்க முயற்சி
துபாய்க்கு பறந்து சென்று தப்பித்து விடலாம் என நினைத்து மும்பை விமான நிலையத்திற்கு விரைந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை சில மாதங்களுக்கு முன்னதாக மும்பை போலீசார் மடக்கிப் பிடித்து அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர். இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு வந்த 5.71 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் பற்றிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.

சொத்துக்கள் முடக்கம்
இந்நிலையில், தற்போது அதிரடியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயரில் இருந்த 7.27 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர். இதனால், பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீக்கிரமே இந்த வழக்கில் இவரும் கைது செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிக்க தடை விதிக்க வேண்டும்
பாலிவுட்டில் சமீபத்தில் இவர் நடிப்பில் பச்சன் பாண்டே திரைப்படம் வெளியானது. மேலும், அட்டாக் படத்திலும் இவர் நடித்திருந்தார். கன்னட படமான விக்ரோந்த் ரோணா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே நடிக்கும் சர்க்கஸ் திரைப்படம் மற்றும் அக்ஷய் குமாரின் ராம் சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் இவரை பாலிவுட்டில் இருந்தே தடை செய்ய வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்து திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











