வடிவேலு நாற்காலியில் உட்கார்ந்தால்.. மற்றவர்கள் கீழேதான்.. நடிகர் சொன்ன சீக்ரெட்
சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் புகழப்படுபவர் வடிவேலு. சில பிரச்னைகளுக்கு பிறகு இப்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் அவர். அப்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் மாமன்னன் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக அவருக்கு மிகச்சிறந்த பெயரையும் பெற்றுக்கொடுத்தது. சூழல் இப்படி இருக்க அவர் குறித்து பிரபல நடிகர் ஜெயமணி கூறியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேலு. தான் அறிமுகமான புதிதில் கவுண்டமணி, செந்தில் ஆகிய இருவருடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நடித்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், உடல்மொழியாலும் பெரிதாகவே கவனத்தை ஈர்த்தார். அதனையடுத்து சோலோ காமெடியனாக உருவெடுத்த அவர் அவ்வப்போது விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். ஒருகட்டத்தில் விவேக்கைவிடவும் வடிவேலுவின் மார்க்கெட் அசுர வேகத்தில் வளர்ந்தது.

வடிவேலுதான் எல்லாமே: வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது அவர் இல்லாத படங்களே இல்லை. ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் கமிட்டானபோது இயக்குநர் பி.வாசுவிடம் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிடுங்கள் என்றும் கூறினார். படத்தில் கதையே இல்லாவிட்டாலும் அந்தப் படத்தில் வடிவேலு இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும் அல்லது வியாபாரம் ஆகிவிடும் என்ற நிலைதான் கோலிவுட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை இருந்தது.
பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க அவருக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மோதல் உருவானது. விஜயகாந்த்தை தாக்கி பேச வேண்டும் என்பதற்காக திமுகவின் மேடையில் ஏறினார் வடிவேலு. ஆனால் அதுவே அவருக்கு பலத்த அடியாக விழுந்தது. வடிவேலுவை வைத்து படம் எடுக்கவே பலரும் யோசித்தார்கள். ஒருகட்டத்தில் வடிவேலு முற்றிலுமாக சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். இருந்தாலும் காமெடி சேனல்களில் வடிவேலுவின் காமெடிதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தன.
மாமன்னன்: ஒருவழியாக வடிவேலுவை சுற்றியிருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டன. அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து நடித்த சந்திரமுகி 2 படத்திலும் அவருக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான் மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வடிவேலுவுக்கு சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தது.
ஜெயமணி பேட்டி: அடுத்ததாக மாரீசன், கேங்கர்ஸ் படங்களில் கமிட்டாகியிருக்கும் அவரை பற்றி அவருடன் பணியாற்றிய பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ஜெயமணி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வடிவேலு ரொம்பவே ஈகோ பிடித்தவர். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாற்காலியில் அமர்ந்தால் சிங்கமுத்து உள்ளிட்டவர்கள் எல்லாம் கீழேதான் அமர்வார்கள். இப்போது என்னமோ சிங்கமுத்து ரொம்ப பேசிக்கொண்டிருக்கிறார். சரி எதற்காக இதையெல்லாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்றுதான் நான் பேசாமல் இருக்கிறேன்"" என்றார்.


Click it and Unblock the Notifications











