ரஜினியை அறைய வேண்டும் என்பதால் முத்து படத்தில் நடிக்கவில்லை: 25 ஆண்டுகளுக்கு பிறகு மனம்திறந்த நடிகர்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் முத்து படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து பிரபல நடிகர் 25 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் முத்து. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.
மேலும் ரகுவரன், சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேல், காந்திமதி, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

முத்துப் படம்
தமிழகத்தில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் வெற்றிப் பெற்றது இப்படம். முத்து படம் 1998ஆம் ஆண்டு ஜப்பான் மொழியில் ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் அதன் இயக்குநரான கேஎஸ் ரவிக்குமார் தமிழ் பேசும் மலையாளியாக கேமியோ அப்பீயரன்ஸ் கொடுத்திருப்பார்.

நடிகர் ஜெயராம்
இந்தப் படம் மலையாளத்தில் மோகன் லால் - ஷோபனா நடித்த தென்மாவின் கொம்பத் என்ற படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. மலையாளத்தில் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் சரத்பாபு கேரக்டரில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து பிரபல நடிகரான ஜெயராம் தெரிவித்துள்ளார்.

சரத்பாபு ரோல்
இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயராம். ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் ஜெயராம். இவரை முத்து படத்தில் சரத்பாபு நடித்த, ரோலில் நடிக்க படக்குழுவினர் முதலில் அவரை அணுகினர்.

மறுத்தது ஏன்?
ஆனால் அந்தக்காட்சியில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அந்த ரோல் ஏற்கனவே அண்ணாமலை படத்தில் ரஜினிக்காந்துக்கு பிரண்டாக நடித்த சரத்பாபுவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் முத்து படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து நடிகர் ஜெயராம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்து பேசியுள்ளார்.

அறைய விரும்பாததால்
அதாவது, அந்தப் படத்தின் ஒரு காட்சியில் முதலாளியான ஜெயராம், தொழிலாளியான நடிகர் ரஜினிகாந்தை கன்னத்தில் அறைவதாக காட்சி இருந்தது. அப்படி ரஜினிக்காந்தை அறைய விரும்பாததால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

கமலை புரட்டி எடுத்திருப்பார்
ஏற்கனவே ஒரு முறை அளித்த நேர்காணலில் ரஜினிகாந்தை அந்தளவுக்கு தெரியாது என்பதாலும், அவரை அடிப்பது போல் நடித்திருந்தால் அவரது ரசிகர்கள் தன்னை தவிர்த்திருப்பார்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால் தெனாலி படத்தில் நடிகர் ஜெயராம் நடிகர் கமல்ஹாசனை புரட்டி எடுத்திருப்பார்.

வசதியாக இருந்தது
அதுகுறித்து பேசிய ஜெயராம், கமலுடன் ஏற்கனவே மலையாள படமான 'சாணக்யன்' படத்தில் பணிபுரிந்ததாகவும், எனவே தெனாலி படத்தில் நடிக்க அவருடன் மிகவும் வசதியாக இருந்ததாகவும் ஜெயராம் தெரிவித்துள்ளார். ரஜினியை அடிப்பது போல் நடிக்க விரும்பாமல் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய தகவல் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











