கலைஞரின் பயோபிக்.. அது எனக்கு பெருமை.. ஆசையை வெளிப்படுத்திய நடிகர் ஜீவா!
சென்னை: ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த நடிகர் ஜீவா, கலைஞருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால், அதில் கலைஞர் ஐயா கேரக்டரில் நடிக்க ஆசை என்றும்,அந்தப் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை என்றும் பேட்டியில் நடிகர் ஜீவா கூறியுள்ளார்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் ஜீவா, இவர், முதல் படத்தில் அறிமுகமானதைப் போலவே இன்றும் அதே துடிப்புடன் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் நேர்த்தியாக செய்து வருகிறார். ராம், கற்றது தமிழ் ஆகிய திரைப்படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர் ஜீவா. இவரின் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸை கலக்கின. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க காத்திருக்கிறார் ஜீவா.

புகைப்பட கண்காட்சி: இந்நிலையில் இவர், கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில், கலைஞர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் 100க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை கடந்த ஜூன் 1ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்துவைத்தார். மேலும் இந்த கண்காட்சியில் தொழிநுட்பங்களை பயன்படடுத்தி பல சிறப்பம்சங்கள் செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி ஜூன் 10 ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் பலரும் இக்கண்காட்சியை காண ஆர்வமாக உள்ளனர்.
புகைப்படக் கண்காட்சி: இந்த கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ஜீவா மற்றும் பா விஜய் செய்தியாளர்களிடம் பேசினர். கலைஞரைப் பற்றி சினிமாவில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, சினிமாவைத் தாண்டி முதலமைச்சராக அவர் செய்ததைப் பார்க்க வியந்து போனேன். கிட்டதட்ட 40 வருஷம் மக்களுக்காக பணி செய்திருக்கிறார். அதை மிகவும் அழகாக இங்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் மியூசியம் இருப்பது போல் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
கலைஞரின் பயோபிக்: கலைஞருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால், அதில் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் நிச்சயமாக அந்தப் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் ஐயா கேரக்டரில் நடிக்க ஆசை. ஏனென்றால் சமீபத்தில் தெலுங்கில் அதே போன்ற கேரக்டர் பண்ணியிருந்தேன். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர். ஆனால் கலைஞரின் வரலாற்றைப் படமாக எடுப்பதை விட வெப் சீரிஸாக எடுத்தால் சரியாக இருக்கும். அதைப் பா.விஜய்யே இயக்குவார் என்று நினைக்கிறேன் என்றார். என்னை இங்கு அழைத்த பா.விஜய்க்கு நன்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல நல்ல விஷயத்தை செய்து வருகிறார். அவரது நற்பணி தொடரட்டும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications











