கேன்சல் ஆன ஜூனியர் என்டிஆரின் தேவரா பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.. ஹோட்டலை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!
சென்னை: தெலுங்கில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருபவர் ஜூனியர் என்டிஆர். இவரது 30வது படமாக உருவாகியுள்ளது தேவரா. இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார் ஜான்வி கபூர்.
அனிருத் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் இன்றைய தினம் நடக்கவிருந்த இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் அதிகப்படியான ஆர்வம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: தெலுங்குப்பட உலகின் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆரின் தேவரா படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது தெரிந்த விஷயம்தான். இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், கொரட்டாலா சிவா உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்து ஈடுபட்டனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடத்தப்பட்டது.

தேவரா படம்: இந்நிலையில் அடுத்தடுத்து ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். விஜய்யின் நடனம் குறித்து பாராட்டு தெரிவித்திருந்த ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இன்னிலையில் தேவரா படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐதராபாபாத்தில் இன்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி அரங்கில் களேபரம்: நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாகவே இந்த அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளே நுழைந்ததால் களேபரம் ஏற்பட்டது. கண்ணாடி கதவுகள் தூள் தூளாகின. கூட்டத்தை சமாளிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டவர்களை பார்க்கும் முயற்சியில் ரசிகர்கள் ஈடுபட்ட நிலையில் அவர்களை சமாளிக்க முடியாமல் இந்த நிகழ்ச்சியை தள்ளி வைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மற்ற ரசிகர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதிகப்படியான ஆர்வம்: இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்த படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்கள் இடையே அதிகமாக காணப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரமோஷன்களும் மிகவும் தீவிரமாக நடத்தப்பட்டுள்ளன. கடந்து 10ம் தேதி இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசான நிலையில் தற்போது ரிலீஸ் ட்ரெயிலரும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளன. இந்நிலையில் தற்போது ரசிகர்களின் இந்த ஆர்வமே படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த விடாமல் செய்துள்ளது. முன்னதாக ரசிகர்களை விலகி செல்ல ஜூனியர் என்டிஆரும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











