சென்னையில் துவங்கிய இந்தியன் 2 படத்தின் சூட்டிங்.. எங்க நடக்குதுன்னு பாக்கலாங்களா!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சூட்டிங்கிற்காக இந்தப் படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்தியன் 2 பட சூட்டிங்
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். முந்தைய பாகத்தில் சந்த்ரு மற்றும் சேனாபதி என இரண்டு கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தள்ளிப் போன சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிவரும் இயக்குநர் ஷங்கர், ஒரே நேரத்தில் கமல் மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். மாதத்தில் 20 நாட்கள் என அடுத்தடுத்து இந்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சென்னை விமானநிலையத்தில் சூட்டிங்
கடந்த சில தினங்களாக ராம்சரணின் சூட்டிங்கிற்காக நியூசிலாந்து சென்றிருந்த ஷங்கர் கடந்த 3ம் தேதி நாடு திரும்பிய நிலையில், இன்றைய தினம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் தொடர்ந்து 15 நாட்கள் இந்த சூட்டிங் நடைபெற்று வரும் 20ம் தேதி வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

அனிருத் இசை
இந்தப் படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் வில்லன் கேரக்டருக்காக சத்யராஜிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். முந்தைய பாகத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டில் ரிலீஸ்
முந்தைய பாகத்தில் ஊழலுக்கு எதிராக தன்னுடைய சொந்த மகனையே கொலை செய்யும் இந்தியன் தாத்தா, தான் வெளிநாட்டில் உயிருடன் இருப்பதாக தொலைபேசியில் பேசுவதாக படம் நிறைவடைந்த நிலையில், இந்த பாகத்தில் எந்த மாதிரியான கதைக்களம் அமையும் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











