Kamal haasan :வடிவேலுவின் ஆரம்பகால ரசிகர்களில் நானும் ஒருவன்.. கமல் வெளிப்படை!
சென்னை : மாமன்னன் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை ஒவ்வொருவராக குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.
அந்த வகையில் நடிகர் வடிவேலு குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் தன்னுடைய நினைவலைகளை அவர் பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் வடிவேலுவை பாராட்டிய கமல்ஹாசன் :நடிகர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படம் வரும் ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் உதயநிதியின் கடைசி படமாக அமைந்துள்ளது. தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், தொடர்ந்து படங்களில் நடிப்பதிலிருந்து தான் விலகவுள்ளதாக முன்னதாகவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், பா ரஞ்சித், படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் நடிகர் வடிவேலு குறித்து தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார். வடிவேலுவின் ஆரம்பகால ரசிகர்களில் தான் மற்றும் இசைஞானி இளையராஜா ஒருவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தேவர் மகன் படத்திற்காக தான் வடிவேலுவை தேர்ந்தெடுத்தபோது, ஒல்லியாக இருக்கிறாரே என்று பலரும் தடங்கல் கூறியதாகவும் அதையெல்லாம் தாண்டி தான் அவரை தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

தேவர் மகன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், நான் ஏத்துக்குறேன்யா என்று வடிவேலு கூறியதால்தான், ஏத்துக்கிட்டதெல்லாம் போதும்யா, போய் புள்ளைக் குட்டியை படிக்க வைங்க என்ற காட்சிக்கு ஒரு அழுத்தம் கிடைத்ததாக கமல்ஹாசன் மேலும் குறிப்பிட்டுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் தனக்கு உறுதுணையாக தன்னுடைய நடிப்பையும் வடிவேலு தாங்கிப் பிடித்ததாக கமல் பாராட்டியுள்ளார்.
க்ளைமாக்சில் வடிவேலுவின் அழுகுரல் கேட்டால்தான் தனக்கும் அழுகை வரும் என்பதை தான் உணர்ந்திருந்ததாகவும் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரை தம்பி வடிவேலு என்று கூப்பிடுவதா என்று தெரியவில்லை என்றும் கமல் நகைச்சுவை ததும்ப கூறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் மாமன்னன் ஆகியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த விஷயம் தனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











