ஜெய் பீம் பார்த்தேன்... கண்கள் குளமாகிவிட்டது... படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்!
சென்னை: ஜெய் பீம் படத்தை பார்த்து கண்கள் குளமாகிவிட்டதாக நடிகர் கமல் ஹாசன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
டிஜெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெய் பீம். அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், எம்எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு என பலர் நடித்துள்ளனர்.

பாஸிட்டிவான விமர்சனங்கள்
இந்தப் படம் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரிவியூ ஷோ திரையிடப்பட்டது. இருளர் இன மக்கள் காவல்துறையால் சந்திக்கும் துயரங்களை அழுத்தமாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஞானவேல். படத்தை பார்த்த பிரபலங்கள் படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

மனதை கனமாக மாற்றிவிட்டது
மேலும் பல இடங்களில் படம் மனதை அழுத்துவதாகவும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் படத்தை பார்த்து இரவு எல்லாம் தனது மனதை கனமாக மாற்றிவிட்டதாக கூறிய நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

கண்கள் குளமானது
இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் ஜெய் பீம் படத்தை பார்த்து விட்டு உருக்கமாக படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

படம் இல்லை.. பாடம்
அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மற்றும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். படத்தை பார்த்த இந்த ரசிகர், இது போன்ற ஒரு அழுத்தமான படைப்பை தந்து, உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள்... இது தமிழ் சினிமாவின் இன்னொரு முன்னேற்ற அடையாளம்.... ஜெய் பீம்!!! வெறும் படம் இல்லை... பாடம்.... என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











