நண்பனின் நினைவு நாளில் மனமுடைந்த கமல் ஹாசன்; ஆறுதல் சொல்லக் குவிந்த ரசிகர்கள்!
சென்னை: தமிழ் திரையுலகம் லட்சக்கணக்கான கலைஞர்களை சந்தித்து இருந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே ஜாம்பவான்களாக இருந்துள்ளனர். அவர்களது இழப்பை வேறு யாராலும் ஈடுகட்ட முடியாது என்கிற அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். உதாரணமாக கண்ணதாசன்,சிவாஜி எம்ஜிஆர், நாகேஷ், விஜயகாந்த் சில்க் ஸ்மிதா என்ற பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியான வரிசையில் இடம் பெறுபவர் பெயர் தான் கிரேசி மோகன். 5 அடி உயரம், சோடாபுட்டி கண்ணாடி, வெத்தலை பாக்கு போட்ட வாய் என கிரேசி மோகன் பார்த்த அனைவரும் அவரது உருவத்தை விவரிப்பார்கள் ஆனால் இப்படித்தான் குறிப்பிடுவார்கள்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் வசனகர்த்தா என பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டிருந்த கிரேசி மோகன் தொடக்கத்தில் ஒரு மேடை நடிகராகவும் நாடக கலைஞராகவும் இருந்தார். உலக நாயகன் கமலஹாசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும் அவரது திரைப்படங்களில் உயிரைக் கொடுத்து வேலை செய்யும் அளவிற்கு ஈடுபாடு கொண்டவராக இருந்த கிரேசி மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்றுடன் கிரேசி மோகன் மறைந்து 5 ஆண்டுகள் ஆகிறது.

கிரேசி மோகன் கமல்ஹாசன் உடன் இணைந்து தெனாலி, வசூல்ராஜா ,பஞ்சதந்திரம், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, இந்தியன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களுக்கு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை வசன எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். இதன் காரணமாகவே தெனாலி , வசூல்ராஜா, பஞ்சதந்திரம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் இன்றைக்கும் ரசிக்கும்படியாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் 1989 ஆம் ஆண்டு காலங்களில் வெளியான கல்யாணத்துக்கு கல்யாணம், பிரைஸிஸ் கிரேசி, விடாது சிரிப்பு போன்ற 600க்கும் மேற்பட்ட நகைச்சுவை தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.
கமலுடன் முதல் சந்திப்பு: தனது கல்லூரி காலகட்டத்தில் எழுதிய தி கிரேட் பேங்க் ராபரி என்ற நாடகத்தை இயக்கி ஒருங்கிணைத்து நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த எழுத்தாளர் என்று பரிசினை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் பெற்றுள்ளார். இங்கிருந்து தான் இருவருக்கும் இடையில் முதல் சந்திப்பு நடந்துள்ளது. ஆனாலும் ஒரு சில நிறுவனங்களில் பணியாற்றி வந்த கிரேசி மோகன் ஒரு கட்டத்திற்கு மேல் கிரேசி கிரியேஷன் சென்ற நாடக நிறுவனத்தை கட்டமைத்தார்.

பாலச்சந்தர் படங்கள்: இது மட்டுமல்லாமல் அந்த நாடக நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளராகவும் அவரே சுற்றிச் சுழன்று பணியாற்றினார். இதன் மூலம் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வந்த கிரேசி மோகன் அதன் பின்னர் வெள்ளித்திரைக்கு வசனம் எழுதும் வாய்ப்பை பெற்று வெள்ளித்திரையில் கால் பதித்தார். தொடக்கத்தில் பாலச்சந்தர் படங்களில் பணியாற்றி வந்த கிரேசி மோகன் அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து கமல்ஹாசன் உடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

உருகிய கமல்: இந்நிலையில் இவரது நினைவு நாளை முன்னிட்டு உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் "எடுத்த வேலையை தனித்தன்மையோடு வெற்றிகரமாக முடிப்பதே தன் திறமையென காட்டி வாழ்ந்த நண்பர் கிரேசி மோகன் நினைவு நாள் இன்று. எத்தனையோ வேலைகளை இணைந்து செய்திருக்கிறோம் இடைவேளை விட்டது போல் எங்கேயோ போய்விட்டார். அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன என பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்தப் பதிவுக்கு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கமலஹாசனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்
கிரேசி மோகனுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் அமெரிக்க நாடு வழங்கும் சர்வதேச விருதான ப்ரொபஷனல் எக்சலென்ஸ் என்ற விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











