கஞ்சா கருப்பு 3 லட்சம் வாடகை பாக்கி.. கலைமாமணி விருதை காணவில்லை.. இருதரப்பும் மாறி மாறி புகார்!
சென்னை: நடிகர் கஞ்சா கருப்பு 3 லட்சம் வாடகை பாக்கி வைத்ததாகவும், வீட்டை லாட்ஜாக மாற்றி உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக வீட்டின் உரிமையாளர் ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலையில், வீட்டில் இருந்த கலைமாமணி விருதை காணவில்லை என கஞ்சா கருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கஞ்சா கருப்பு, பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா கருப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார்.அந்த படத்தில், கஞ்சா தோட்டங்களில் வேலை பார்ப்பவராக நடித்திருந்தார். அந்த படம் வெற்றிபெற்றதால், சினிமா வட்டாரத்தில் அவரை கஞ்சா கருப்பு என அழைக்க தொடங்கினர். அவரின் உண்மையான பெயர் கருப்பு ராஜா.

நடிகர் கஞ்சா கருப்பு: பிதாமகன் படத்திற்கு பிறகு ராம் படத்தில் நடித்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதன் சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, சிவப்பதிகாரம், கிழக்கு கடற்கரை சாலை, தாமிரபரணி, பருத்துவீரன், திருமகன், அறை எண் 305ல் கடவுள், நாடோடிகள், களவாணி, வேங்கை, தர்ம துரை, நிமிர், சண்டகோழி 2, களவாணி 2 என அடுத்தடுத்து படத்தில் நடித்துள்ளார்.
வாடகை பாக்கி: இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் வீட்டை லாட்ஜாக மாற்றி உள் வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் காவல்நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். நகைச்சுவை நடிகரான கஞ்சா கருப்பு, சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 2021 ஆம் ஆண்டு முதல் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் படப்பிடிப்பு இருக்கும் போதெல்லாம் கஞ்சா கறுப்பு இந்த வீட்டில் தங்குவார் என்றும், இவர் சில ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்றும், எப்போது கேட்டாலும் தருவதாக மட்டுமே கூறி வருகிறார். இப்படியே வாடகை பாக்கி 3 லட்சம் ஆகிவிட்டது என்றும், அதுமட்டுமில்லாமல், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதை காணவில்லை: இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கஞ்சா கருப்பு, வீட்டில் வைத்திருந்த கலைமாமணி விருதை காணவில்லை என்று மதுரவாயல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். நான் இந்த வீட்டில் 4 வருடமாக இருந்து வருகிறேன். வழக்கமாக அவர் வாடகையை கேட்பதற்கு முன்பே நான் தந்துவிடுவேன்.சில நாட்களுக்கு முன், அவர் போன் செய்து தனக்கு வீடு வேண்டும் என்று வீட்டை காலி செய்ய சொன்னார். நான் ஒருவாரம் டைம் கேட்டிருந்தேன். நான், மதுரை சென்றுவிட்டு இன்று வந்து பார்க்கிறேன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வீட்டுக்குள் நான் வைத்திருந்த கலைமாமணி விருதை காணவில்லை என்று கூறியுள்ளார். வீட்டின் உரிமையாளர் மூன்று லட்சம் வாடகை பாக்கி என புகார் அளித்திருக்கும் நிலையில், கஞ்சா கருப்பு விருதை காணவில்லை என கூறியிருப்பதால், உண்மையில் விருது காணாமல் போனதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











