கார்த்திக்கு என்ன ஆச்சு? சர்தார் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. வீங்கிய கால்.. படப்பிடிப்பு ரத்து!
மைசூரூ: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் கார்த்திக்கு அடிபட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. மைசூரில் நடைபெற்று வந்த சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது கார்த்திக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் கால் வீங்கி உள்ளது. இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. கார்த்தி இப்போது சென்னையில் உள்ளார் என கூறப்படுகிறது.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் படம் என்றால் அது, சர்தார் 2 படம்தான். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியது. இது மட்டும் இல்லாமல், கங்குவா படத்தில் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் சர்தார். தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். வசூல் ரீதியாக ஹிட் அடித்த இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாகவும் , லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். தற்போது இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் இணைந்து நடித்து வருகிறார்.

சர்தார் 2: படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில வாரங்களுக்கு உள்ளாகவே, சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற ஷுட்டிங்கில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தார். அவர் சண்டைக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்த போது, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து: இப்படியான நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. படத்தில் கார்த்தி தொடர்பான காட்சிகள்தான் அதிகம் இருப்பதால், கார்த்தியின் கால்ஷீட் தான் அதிகம் தேவைப்படுகிறது. அவரும் இரவு பகல் பார்க்காமல் இயக்குநருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இதற்கிடையில் மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் கார்த்திக்கு காலில் அடிபட்டு உள்ளது.

படப்பிடிப்பு ரத்து: காலில் அடிபட்ட கார்த்தியை உடனே மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பின்னர் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளார்கள். மேலும் கார்த்திக்கு ஏற்பட்ட காயத்தால் கால் வீக்கமடைந்து உள்ளது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்த்தி முழுவதும் தயார் ஆன பின்னர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் படத்தின் எடிட்டிங் வேலைகளை முடித்து வைக்கலாம் என இயக்குநரும் தயாரிப்பாளரும் யோசித்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான வா வாத்தியார் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் படத்தின் போஸ்டரே படத்தின் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் வா வாத்தியார் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











