Actor Karthi: ஜப்பான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.. கார்த்தியை கொண்டாடிய துபாய் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் கார்த்தியின் ஜப்பான் படம் ராஜூ முருகன் இயக்கத்தில் அவரது 25வது படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இந்தப் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி வித்தியாசமான ஜானர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய கேரியரை நிதானமாக கையாண்டு வருகிறார். ஆயினும் கடந்த ஆண்டில் மட்டுமே இவரது நடிப்பில் 3 படங்கள் வெளியாகின. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன.
ஜப்பான் படம்: இதனிடையே இந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஏப்ரலில் வெளியானது. இதையடுத்து தீபாவளி கொண்டாட்டமாக கார்த்தியின் ஜப்பான் படம் ரிலீசாகவுள்ளது. கடந்த தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் படம் வெளியாகி அதிரிபுதிரி வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தீபாவளிக்கு வெளியாகவுள்ள ஜப்பான் படத்தை இயக்கியுள்ளார் ராஜூ முருகன். படத்தில் அனு இமானுவேல் கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார்.
ஜப்பான் பட இசை வெளியீடு: உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்துக் கொண்டு பேசினர். நடிகர் சூர்யாவின் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். நடிகை தமன்னா இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றபோதிலும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி அசத்தினார்.
துபாயில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: படம் இன்னும் சில தினங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கார்த்திக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அவர் உள்ளே நுழைந்தவுடன் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.
மேளம் வாசித்த கார்த்தி: இதனிடையே நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தி, செண்டை மேள கலைஞர்களுடன் தானும் உற்சாகமாக மேளமடித்து ரசிகர்களை அசத்தினார். இதனால் ரசிகர்களிடையே உற்சாகம் கரைபுரண்டது. முன்னதாக ராஜூ முருகனின் எழுத்து தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் யாரிடமும் தனக்காக கதை ரெடி செய்யுங்கள் என்று கேட்காத தான், ராஜூ முருகனிடம் உரிமையுடன் தனக்காக கதை எழுதுமாறு கேட்டதாகவும் கார்த்தி பேட்டியொன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











