Karthi speech :நான் ரெமோ மாதிரி.. பொன்னியின் செல்வன் 2 விழாவில் கார்த்தி வெளிப்படை!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2.
இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ஏப்ரல் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தின் சிறப்பான பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். படத்தின் பிரமோஷனல் டூரையும் படக்குழுவினர் துவக்கியுள்ளனர்.
கார்த்தியின் பேச்சு : அமரர் கல்கியின் சிறப்பான கைவண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம், ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது. இந்தக் காவியத்தை திரைவடிவில் கொண்டுவர, எம்ஜிஆர் முதல் பலர் பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தற்போது அந்த முயற்சியை சாத்தியப்படுத்தியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். அவருக்கும் இது முதல் முயற்சியிலேயே சாத்தியப்படவில்லை.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதையடுத்து தற்போது பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் சில தினங்களில் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. முதல் பாகத்தை போலவே, இரண்டாவது பாகமும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்கள் மிகச்சிறப்பாக முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலேயே படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் துவக்கி விட்டனர். ஒவ்வொரு விஷயமாக யோசித்து, படத்தின் சிறப்பம்சங்களை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தனர். படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் படத்தின் ஆன்த்தமை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சி ஒன்றின்மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஷோபிதா உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக அமைந்தது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, ரசிகர்களுக்கு ஐ லவ் யூ சொல்லி பேசத் துவங்கினார். மேலும் அங்கிருந்த இளவரசிகள் அனைவருக்கும் உயிர் உங்களுடையது தேவி என்று கூறி ஆர்ப்பரிக்க வைத்தார்.

தான் ஒரு இன்ஜினீயரிங் மாணவன் என்பதை வெளிப்படுத்திய கார்த்தி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் படிக்க ஆசைப்பட்டதாகவும் கடைசிவரை தனக்கு இங்கு சீட் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். அந்த கிரவுண்டில் ஆயிரத்தில் ஒருவன் டைமில் பலநாள் ரன்னிங் ஓடியுள்ளதாகவும் நினைவு கூர்ந்தார். பாய்ஸ் ஸ்கூலில் தான் படித்த நிலையில், லவ் செய்ய சந்தர்ப்பம் கிடைக்குமா என்று ஏங்கிய நிலையில் வந்தியத்தேவன் போன்ற கேரக்டர் கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரியல் லைஃபில் தான் ஜாலியான வந்தியத்தேவன் கேரக்டர்தான் என்று கார்த்தி தெரிவித்துள்ளார். நான் மகான் அல்ல படத்தில் வருவது போல, எப்படியாவது ஒரு பெண்ணின் போன் நம்பர் கிடைக்காதா, எப்படியாவது பேசிவிட மாட்டோமா என்பது போல யோசிக்கும் கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ரெமோ மாதிரி என்னவாக மாற விரும்புகிறோமோ அதுபோல மாறிவிடும் கேரக்டர் தன்னுடையது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு அரங்கத்தையே அதிர வைத்தது.


Click it and Unblock the Notifications











