Karthi: ஏஆர் ரஹ்மானிடம் வெறுப்பை காட்டாதீங்க.. யுவனை அடுத்து கார்த்தியும் சப்போர்ட்!
சென்னை: இசைப்புயல் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். அவர் நீண்ட காலங்களுக்கு பிறகு சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுகளால் பல குளறுபடிகள் நிகழ்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த தவறுக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தானே பலிகடா ஆவதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏஆர் ரஹ்மான் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இசை நிகழ்ச்சி விவகாரத்தில் ஏஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்த நடிகர் கார்த்தி: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் 30 ஆண்டுகளை கடந்து தன்னுடைய இசையால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறார். சர்வதேச அளவில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் ஏஆர் ரஹ்மான் நீண்ட காலங்களுக்கு பிறகு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக ஏராளமான திரைத்துறைப் பிரபலங்கள் சூழ நடந்தது. நடிகர் கார்த்தி, மணிரத்னம் மற்றும் அஜித் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் செய்த நிர்வாக பிழையால் ஏராளமான குளறுபடிகள் மற்றும் புகார்கள் எழுந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் ஏராளமான ரசிகர்கள் கேட்டிற்கு வெளியில் நிற்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், கோல்டன் டிக்கெட்டுகளைகூட அவர்கள் கோபத்தடன் கிழித்தெறிந்ததை பார்க்க முடிந்தது.
இந்த குளறுபடிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்கு பணத்தை திரும்பத் தருவதாக ஏஆர் ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்தனர். இந்நிலையில், இந்த நிகழ்விற்கு தான் பலிகடா ஆவதாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வருத்தம் தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்தி முடித்துள்ளார். ஆனால் இதுபோன்ற சம்பவம் தன்னுடைய நிகழ்ச்சியில் நடந்ததுகுறித்து அவர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மானுக்கு தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஏஆர் ரஹ்மானுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற பெரிய நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் என்பது தவிர்க்க முடியாதது என்றும் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தும் இசையமைப்பாளர்கள், இத்தகைய விஷயங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருப்பார்கள் என்றே நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வு அதிகமான வருத்தத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தடுத்த திரைத்துறை பிரபலங்கள் ஏஆர் ரஹ்மானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தியும் ஏஆர் ரஹ்மானுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கெல்லாம் தெரிந்த ஏஆர் ரஹ்மான் மீது நாம் அனைவரும் அதிக அன்பை கொண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் துரதிர்ஷ்டவசமானது என்றும் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பத்தினரும் பங்கேற்றதாகவும் இந்த நிகழ்வால் அவர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதை தான் உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ள கார்த்தி, இந்த நேரத்தில் ஏஆர் ரஹ்மான் மீது வெறுப்பை வெளிப்படுத்தாமல் அவர் மீது அன்பை வெளிப்படுத்துமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அரங்கில் 25 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆனால் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதே இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் அந்த சாலையில் மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் அதிகமான டிராபிக்கை கடந்து ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி நீண்ட நாட்களுக்கு பிறகு நடத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் வந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சில பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











