சினிமாலதான் விஜய் டாப்.. அரசியலில் உதயநிதிதான் கில்லி.. கருணாஸ் என்னங்க இப்படி சொல்றாரு!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டார். சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபபடப்போவதாகவும் தெரிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
கருணாஸ் அந்த பேட்டியில், " அரசியல் கட்சி என்பது சேவை மனப்பான்மையோடு தொடங்கப்படுவது. அந்த வகையில் விஜய் தனது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அது ஆரோக்யமானதுதான். ஆனால் அரசியல் களம் மிகவும் கடுமையானது. பலரும் எம்.ஜி.ஆர். குறித்து பேசுவார்கள், ஆனால் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு குறித்து பாருங்க. அவர் படிப்படியாகத்தான் அரசியலில் வளர்ந்து வந்தார். மேலும் அன்றைய காலகட்டமும் இன்றைய காலகட்டமும் முற்றிலும் வேறு.

ஒருமுறை வடிவேலு சார் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தார். எங்கு பார்த்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக மாறவில்லை. உங்களை வேடிக்கை பார்க்க வருபவர்கள் ஓட்டு போடுவார்கள் என நம்பமுடியாது. அதுவும் வேறு ஒரு சின்னத்திற்கு ஓட்டுப்போட்டு பழகியவர்களை வேறு சின்னத்திற்கு ஓட்டுப்போடவைப்பது என்பது முற்றிலும் சவாலான விஷயம்.
சித்தாந்தம்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை தான் கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஆட்சியைப் பிடித்தார். அதுபோல விஜய் இளைஞர்களின் வாக்குகளை நம்பி அரசியலுக்கு வந்துள்ளார். அண்ணாதுரை தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தை ஊர் முழுக்க பேசி பேசி மக்களிடம் வாக்குகள் பெற்று, ஆட்சிக்கு வந்தார். அதனால்தான் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து அந்த கட்சிக்கு ஆதரவு இருந்துகொண்டே இருக்கின்றது. அதுபோல விஜய் கட்சியின் கொள்கை என்ன என்பது மிகவும் முக்கியம். அதிலும் ஏற்கனவே உள்ள கட்சிகளில் இருந்து நீங்கள் எங்கு வேறுபட்டுள்ளீர்கள் என்பதும் மிகவும் முக்கியம். எடுத்தவுடன் தேர் ஓட்டிவிட முடியாது.
தலைவா: தலைவா படத்தில் இடம் பெற்ற டேக் லைனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க கொட நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை. இவையெல்லம் விஜய் மனதில் இருக்கலாம். ஆனால் அவரது நோக்கம் தற்போது வேறாக இருக்கலாம். இதுமட்டும் இல்லாமல், தற்போது முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். அடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வரலாம். அதனைக் கணக்கிட்டு விஜய் அரசியலில் களம் இறங்கி இருக்கலாம்.

உதயநிதி: ஆனால் சினிமாவில்தான் விஜய், உதயநிதியை விட பெரிய நடிகர். ஆனால் அரசியலில் விஜய்யை விட உதயநிதிதான் பெரிய ஆள். பாரம்பரியமான அரசியலில் இருந்து உதயநிதி வருகின்றார். அவருக்குத்தான் அரசியலில் சுழிவு நெழிவு நன்றாகத்தெரியும். விஜய்யைப் பார்த்து முதல் கேள்வியாக, தீடீரென ஏன் இந்த அரசியல்? இவ்வளவு ஆண்டுகளாக குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல விஷயங்கள் நடந்தது. அப்போது எல்லாம் எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு இப்போதுமட்டும் ஏன் அரசியலுக்கு வர்றீங்க? எனக் கேட்பேன் எனவும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











