கட்டணத்தை குறைத்து உடலை கொடுத்த கேரள மருத்துவமனை.. உடல் தகனம்.. உருக்கமாக நன்றி சொன்ன நடிகர்!
சென்னை: கட்டணத்தை குறைத்து பத்திரிக்கையாளரின் தாயார் உடலை கொடுத்த கேரள மருத்துவமனைக்கு நடிகர் லாரன்ஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இருக்கப்பட்ட பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு கஷ்டப்படுவர்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லாரன்ஸ் பலருக்கும் கணக்கு பார்க்காமல் அள்ளிக் கொடுத்து வருகிறார்.

கேரள முதல்வருக்கு வேண்டுகோள்
நடிகர் லாரன்ஸை கேட்டால் எல்லா உதவியும் கிடைக்கும் என மக்கள் நம்பி கேட்கும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் நேற்று கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயாரின் உடலை அடக்கம் செய்ய கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

லாரன்ஸ் அறிக்கை
லாரன்ஸின் வேண்டுகோளை ஏற்ற கேரள மருத்துவமனை பத்திரிகையாளர் அசோக்கின் தாயார் உடலை மகனிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

வேண்டுகோள் விடுத்தோம்
மருத்துவமனைக்கு நன்றி என்ற தலைப்பில் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "முடக்கு வாதம் மற்றும் இன்னும் பிற நோய்க்காரணிகளால் கேரள NIMS தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தமிழக பத்திரிகையாளர் அசோக் என்பவரது தாயார் மருத்துவமனையிலேயே இறந்துவிட்ட நிலையில், வறுமையில் வாடும் அந்த பத்திரிகையாளர் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கட்ட முடியாமல் அவதிப்படுவது குறித்து அவரது நண்பர் மூத்த பத்திரிகையாளர் கொ. அன்புகுமார் அவர்கள் மூலம் அறிந்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவ கட்டணத்தை குறைத்து தரச்சொல்லி வேண்டுகோள் விடுத்தோம்.

உடல் தகனம்
அவர்களும் ரூ.40,000 தள்ளுபடி செய்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அசோக்கின் தாயாரது உடலை மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். எனது கோரிக்கையை ஏற்று கட்டணத்தை குறைத்துக் கொடுத்த மருத்துவமனை MD அவர்களுக்கு நன்றிகள். தற்போது அசோக்கின் தயாரது உடல் தகனம் செய்யப்பட்ட செய்தியையும் அறிந்தேன்.

மனிதநேயம் தழைக்கட்டும்
இதற்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு. சாய் ரமணி, மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் திரு. லிஸ்டின், பத்திரிகையாளர் திரு.கொ.அன்புகுமார், எனது உதவியாளர் திரு.புவன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். மனிதநேயம் தழைக்கட்டும்!!! நன்றி என குறிப்பிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த அறிக்கையை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications