"தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காத”- 120 ரூபாய் பேச்சுக்கு இணையவாசிகளிடம் வறுபடும் எம்.எஸ். பாஸ்கர்!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இன்றைக்கு அதாவது ஜூன் 14ஆம் தேதி அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது இரண்டு தான். அதில் ஒன்று விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா இன்று ரிலீஸ் ஆகின்றது. மற்றொன்று, லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் சர்ச்சைப் பேச்சுதான். மகாராஜா படம் தொடர்பாக நமது தளத்தில் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த கட்டுரையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் பேச்சு தொடர்பாக பார்க்கலாம்.
என்ன பேசினார் எம்.எஸ். பாஸ்கர்? நடிகர் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் லாந்தர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தனது உரையில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அது, "உங்களுக்கு ஒரு படம் பிடித்திருந்தால் அதனை 4 பேரிடம் கூறுங்கள். அதுவே ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை மற்றவர்களிடம் கூறி படம் பார்க்கச் செல்பவர்களைத் தடுக்காதீர்கள். எல்லாரும் படம் பார்க்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் 120 ரூபாயில் மாளிகை கட்டப்போவதில்லை. அனைவரும் வந்து படங்கள் பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை மறந்து விடாதீர்கள்" என்பதுதான்.

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: எம்.எஸ். பாஸ்கரின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவியதால், இணையவாசிகள் பலர் பாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, 120 ரூபாய் பணத்தை ஒவ்வொருவரும் மிகவும் கஷ்பட்டுத்தான் சம்பாதிக்கின்றனர். சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன், தனது பிரச்னைகளை மறந்து, தன்னை இந்த படம் கொஞ்சம் மகிழ்விக்கும் என நம்பிக்கொண்டு படம் பார்க்க வருபவனுக்கு நீங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தால் அவன் படம் நல்லா இல்லை என்றுதான் கூறுவான்" எனவும், ஒவ்வொரு 120 ரூபாயும் சேர்ந்துதான் படத்தின் வசூலைத் தீர்மானிக்கின்றது எனவும், உழைப்புக்கேற்ற ஊதியம் இருந்தால் 120 ரூபாய் என்பது பெரிய தொகையாகத் தெரியும், அதிகப்படியான சம்பளம் இப்படி பேச வைக்கின்றது எனவும், பாஸ்கர் வாங்கிக் கட்டிக்காத எனவும் இணையவாசிகள் பாஸ்கரைச் சாடியுள்ளனர்.
பாடம் எடுத்த இணையவாசி: ஒரு சில இணையவாசிகள் கமெண்டுகளில் பாஸ்கருக்கு பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதில், ஒரு பொருள் நல்லா இல்லை என்றால் மக்கள் ஏமாறக்கூடாது என அவர்களை எச்சரிப்பதுதான் சரி. உதாரணத்திற்கு ஒரு சோப்பில் அதிக கெமிக்கல் கலந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. அது மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் எனத் தெரிந்தும், சோப்பை உற்பத்தி செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் என்பதற்காக அமைதியாக இருக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

சமூகத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் படங்கள்: இணையவாசிகளிடம் நடிகர் பாஸ்கர் வறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு நடிகராக அவர் பேசியது சினிமா துறையைச் சார்ந்தவர்களுக்கு வேண்டுமானால் சரியாக படலாம். ஆனால் இன்றைக்கு சினிமா நல்ல சினிமா, மொக்கை சினிமா என இரு வகைகளில் வருவதில்லை. இங்கு சினிமாக்கள் சமூகத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. விஜய் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் சர்க்கார். இந்த படத்தில், அரசு வழங்கக்கூடிய விலையில்லா திட்டங்கள் குறித்து ஒரு காட்சி அமைக்கப்பட்டதுடன், அரசு கொடுத்த பொருட்களை தீயில் வீசுவது போன்ற காட்சி இருக்கும். இந்த காட்சியைப் பார்த்த விஜய் ரசிகர்கள், அரசு கொடுத்த விலையில்லா லேப்டாப்பை உடைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் விலையில்லாத் திட்டங்கள் மூலம் கொடுக்கப்படும் கல்வி உபகரணங்கள் என்பது பல குடும்பங்களால் தங்களது வருமானத்தின் மூலம் வாங்க முடியாத பொருளாகவே உள்ளது. அப்படி இருக்கையில் தவறான கருத்தை விதைக்கும் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க முடியுமா?

பிரதமரே சுட்டிக் காட்டுகின்றார்: கேரளா ஸ்டோரீஸ் போன்ற படத்தின் பிரச்சார நெடியில் எடுக்கப்பட்ட படத்தினை பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்தில் பிரச்சாரத்தின்போது பேசுகின்றார். இப்படியான படங்களையும் விமர்சிக்காமல் இருக்க முடியுமா? இதே வாதம்தான் ரசிகர்களை மகிழ்விக்காத படங்களுக்கும்.
எதிர்மறை விமர்சனங்கள்: ஒருபடத்தின் ட்ரைலரைப் பார்த்து படம் பார்க்க வரும் ரசிகர், படத்தின் ட்ரைலருக்கும் படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது எனும்போது பொதுவெளியில் வந்து சொல்லத்தான் செய்வார்கள். படம் நன்றாக இருந்தால் படம் நன்றாக இருக்கின்றது எனவும் ரசிகர்கள் தாங்களாகவே படத்திற்கு விளம்பரம் செய்வதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம். சினிமா துறையில் இருந்துகொண்டு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்குவது வேடிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











