மனைவி தற்கொலை: வரதட்சணை கொடுமை வழக்கில் நடிகர் கைது
ஹைதராபாத்: மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஹைதராபாத் போலீசார் நடிகர் மது பிரகாஷை கைது செய்துள்ளனர்.
பாகுபலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மது பிரகாஷ் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவருக்கும் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த பாரதிக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் ஆனது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதி(34) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பாரதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் மது பிரகாஷ் மீது புகார் அளித்தனர்.
அந்த புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
மது வீட்டிற்கு நேரத்திற்கு வராததால் அவருக்கும், பாரதிக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. மதுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது.
திருமணத்தின்போது ரூ. 15 லட்சம் வரதட்சணை கொடுத்தோம். இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு மது பிரகாஷ் எங்கள் மகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். அவரின் கொடுமை தாங்க முடியாமல் தான் எங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டார். அதனால் மது பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு பாரதியின் பெற்றோர் தங்கள் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர். அவர்களின் புகாரின்பேரில் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்த போலீசார் மது பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாரதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரின் அம்மா போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











