மம்முட்டி: சினிமாவில் சிறிய விஷயங்களும் பூதாகரமாக்கப்படுது.. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு மம்முட்டி வரவேற்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் மிகப்பெரிய தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய போராட்டத்தை பலரும் முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையை கடந்த 2019ம் ஆண்டிலேயே வெளியிட்டது. ஆயினும் இதை வெளியிட தடை நீடித்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்துதான் இந்த விவகாரம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வெளியாகியுள்ளது. தாமதப்படுத்தப்பட்ட போதிலும் நீதி எப்போதுமே சாயாது என்பதை இந்த விஷயம் உறுதிப்படுத்தியுள்ளது.

நடிகர் மம்முட்டி: கேரளாவில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல காலங்களாக குற்றச்சாட்டுகள் பதிவாகிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் அவ்வப்போது எழும் பிரச்சினைகள், அப்படியே அமுக்கப்பட்டதாகவும், அம்மா அமைப்பு முறையாக செயல்படவில்லை என்றும் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டில் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் அப்போது மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், ஹேமா என்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு கேரளாவின் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹேமா கமிட்டி அறிக்கை: கடந்த 2019ம் ஆண்டிலேயே ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், தடை காரணமாக இதன் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. காலம் தவறிய நீதி என்ற போதிலும் தற்போது இதன் அறிக்கை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தெரிந்த விஷயம்தான் என்றபோதிலும், தற்போது அடுத்தடுத்து தங்களது கொந்தளிப்புகளை நடிகர்கள், நடிகைகள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மம்முட்டி -மோகன்லால் மௌனம்: தொடர்ந்து சித்திக், ரஞ்சித் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள், இந்நாள் நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்களை பதிவிட்ட நிலையில், மலையாளத்தின் மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் மௌனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்நிலையில், இநத விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மோகன்லால் பேசியுள்ளார். முன்னதாக அம்மா கமிட்டியின் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்ததாக அமையவுள்ளவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக அமைய வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
மௌனம் கலைத்த மம்முட்டி: இதனிடையே தற்போது மம்முட்டியும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அம்மா கமிட்டியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவதற்காக காத்திருந்ததால், இதுவரை தனியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் திரைத்துறையிலும் உள்ளதாகவும் மம்முட்டி கூறியுள்ளார். திரைத்துறையை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருவதால் சிறிய பிரச்சினைகளும் பெரிய அளவிற்கு சர்ச்சைக்கு உள்ளாகி வருவதாகவும் கூறியுள்ளார். சினிமாவில் எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழாதவண்ணம் திரைத்துறையினர் கவனத்தோடும் விழிப்போடும் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மல்லுவுட்டில் அதிகார மையம் கிடையாது: மலையாள திரையுலகில் அதிகார மையம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். ஹேமா கமிட்டியின் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்றும் மம்முட்டி கூறியுள்ளார். குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் மோகன்லாலை தொடர்ந்து மம்முட்டியும் தன்னுடைய மௌனத்தை கலைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











