5 தசாப்த திரையுலக சாதனை.. இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த மம்மூட்டி!
புதுடெல்லி: மலையாள நடிகர் மம்மூட்டிக்கு, நாட்டின் மிக உயரிய விருதான 'பத்ம பூஷண்' விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மலையாள ரசிகர்களுக்கு மட்டுமில்லை, தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக இருக்கிறார் நடிகர் மம்முட்டி. 1971-ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய இவர் 5 தசாப்தங்களைக் கடந்து 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில் நடித்து இந்திய சினிமாவின் அசைக்க முடியாத தூணாக மாறி இருக்கிறார்.
அவரது இந்த அசாத்தியமான கலைச் சேவையைப் பாராட்டி மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதை அறிவித்தது. பத்ம ஸ்ரீ விருது, 3 தேசிய விருதுகள், பல மாநில விருதுகளைத் தொடர்ந்து அவரது மகுடத்தில் மற்றுமொரு வைரக் கல்லாக இந்தப் 'பத்ம பூஷண்' விருது இணைந்துள்ளது.
மம்மூட்டி குடும்பம்: டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மம்மூட்டி தனது குடும்பத்தினருடன் டெல்லி வந்திருந்தார். இந்த விழாவின் போது மம்மூட்டியின் மனைவி சுல்ஃபத், மகள் சுருமி மற்றும் அவரது மகனும் பிரபல முன்னணி நடிகருமான துல்கர் சல்மான் ஆகியோர் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து மம்மூட்டி விருதை கம்பீரமாகப் பெற்றுக் கொண்ட போது, அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

குவியும் வாழ்த்து: இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. மம்மூட்டியுடன் சேர்த்து பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக்கும் இன்று பத்ம பூஷண் விருதைப் பெற்றுக் கொண்டார். சினிமாவைத் தாண்டி பல தொண்டு நிறுவனங்கள், புற்றுநோய் மற்றும் வலி நிவாரணக் காப்பகங்களுக்கு பல உதவிகளைச் செய்து வரும் மா மனிதனான மம்மூட்டிக்கு இந்த விருது கிடைத்தது மிகச் பொருத்தமானது என திரையுலகினரும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications