Manobala :என் மேல கமல்ஹாசனுக்கு வருத்தம்தான்.. ட்ரெண்டாகும் மனோபாலா பழைய பேட்டி!
சென்னை : நடிகர் மனோபாலா அதிகமான படங்களை இயக்கியுள்ளதுடன், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மிகச்சிறந்த இயக்குநராக இருந்த நிலையில் கமர்ஷியல் படங்களையும் இயக்கினார். ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.

கமல்ஹாசன் குறித்து பேசிய மனோபாலா :தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இணைந்து தன்னுடைய சினிமா கேரியரை துவக்கியவர் இயக்குநர் மனோபாலா. அவரிடம் உதவி இயக்குநராக 16 படங்களில் பணியாற்றியுள்ளார் மனோபாலா. இவரை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்த்து விட்டது நடிகர் கமல்ஹாசன். இதனிடையே தன்னுடைய வாழ்க்கையில் காட் பாதராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன் என்று மனோபாலா தனது பழைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
தான் சாப்பிடும் சாப்பாடு உள்ளிட்டவை கமலால் கொடுக்கப்பட்டதாக தான் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் மனோபாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார். கமல்தான் தன்னை ரஷ்யன் எம்பஸி போன்ற இடங்களில் உலகத்தரத்திலான படங்களை பார்க்க வைத்தவர் என்றும் அனந்து, தான் மற்றும் கமல்ஹாசன் இணைந்து இத்தகைய படங்களை பார்த்ததாகவும் ஆனால் தான் கமர்ஷியல் படங்களை இயக்கியதற்கு காரணம், தான் ட்ரெண்டாக மாறியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
தான் கமர்ஷியல் படங்களை இயக்கியது கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் தன்னிடம் எதிர்பார்த்ததை மணிரத்னம் செய்து வருவதாகவும் மனோபாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார். 1982ம் ஆண்டில் ஆகாய கங்கை என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவன் என்ற வெற்றிப் படத்தையும் இயக்கினார். தொடர்ந்து சதுரங்க வேட்டை என்ற வெற்றிப் படத்தையும் தயாரித்தார்.

புதிய வார்ப்புகள் படத்தில் பணியாற்றியபோதே, அவரது மெலிந்த தேகம் உள்ளிட்டவை, பாரதிராஜாவை ஈர்க்க, அந்தப் படத்தலேயே மனோபாலாவிற்கு நடிக்க சிறிய வாய்ப்பை கொடுத்தார் பாரதிராஜா. தொடர்ந்து கோபுரங்கள் சாய்வதில்லை, டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் போன்ற படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த மனோபாலா, இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
இதனிடையே கல்லீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த மனோபாலா, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஏராளமான நடிகர்கள், நடிகைகள், சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். சிறப்பான நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களை கவர்ந்த மனோபாலாவின் இழப்பு, தமிழ் திரையுலகின் பேரிழப்பாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











