Mansoor Ali khan: நான் தலைமறைவாகவில்லை.. ஆடியோ மெசேஜ் வெளியிட்ட மன்சூர் அலிகான்!
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் ஆஜராகவில்லை.

இதனால் அவர் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்கும் வகையில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு: சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியது பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கும் உள்ளானது. முன்னதாக நடிகை த்ரிஷாவும் மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளம் மூலமாக கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு: இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து மன்சூர் அலிகான் மீது நடவக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்த நிலையில், அவர்மீது இரு பிரிவுகளின்கீழ் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வாய்ஸ் மெசேஜ் மூலம் விளக்கம்: இதனிடையே இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி தான் ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தொண்டை பிரச்சினை காரணமாக பேச முடியாததால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நாளை ஆஜராவதாக காவல்துறைக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து வாய்ஸ் மெசேஜ் மூலமும் விளக்கம் அளித்துள்ளார் மன்சூர் அலிகான். முன்னதாக ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தலைமறைவாக அவசியம் இல்லை: இந்நிலையில் தனது வாய்ஸ் மெசேஜில் தனக்கு வேண்டாதவர்கள் தான் தலைமறைவாகிவிட்டதாக சந்தோஷ செய்தியை பரப்புவதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருக்கிறது, இதையெல்லாம் விட்டுவிட்டு கைக்கூலிகள் மூலம் இந்த தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தான் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாளை ஆஜர் என விளக்கம்: மேலும் தான் என்ன நிஜமாகவே யாரையாவது கற்பழித்து விட்டேனா அல்லது கொலை செய்துவிட்டேனா என்றும் அவரது ஸ்டைலில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வாய்ஸ் மெசேஜ் மூலம் அவர் விசாரணைக்கு நாளைய தினம் ஆஜராகவுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளார். முன்னதாக த்ரிஷா குறித்து தான் பேசிய விஷயங்கள் வீடியோ எடிட்டிங் மூலம் தவறாக வெளிப்படுத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











