Mansoor alikhan: கோலிவுட் முழுவதும் உதயநிதி கட்டுப்பாட்டில்தான் இருக்கு.. வேதனை தெரிவித்த மன்சூர் அலிகான்!
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இதனிடையே அவரது நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சரக்கு படம் அதிகமான கவனத்தை பெறாமல் போனது. இந்த படத்திற்காக நான்கு கோடி ரூபாய் செலவழித்ததாகவும் ஆனால் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உதயநிதியின் கைகளில் தமிழ் சினிமா உள்ளதாகவும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கம், புரொட்யூசன் கவுன்சில் என அனைத்தும் அவர் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கட்சி சார்பில் சில இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூட்டணிக்காக அடுத்தடுத்து காக்கா, கழுகு, எலி உள்ளிட்ட பல தூதுக்களை விட்டுள்ளதாகவும் அவர் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தான் ஆரணியில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான்: நடிகர் மன்சூர் அலிகான் பல ஆண்டுகாலமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லனாகவும் கேரக்டர் நூல்களிலும் நடித்து வருகிறார். தான் நினைக்கும் விஷயங்களை கட் அண்ட் ரைட்டாக வெளிப்படையாக பேசும் குணமுடைய மன்சூர் அலிகான், சமீபத்தில் சில விவகாரங்களில் வெளிப்படையாக பேசி அதன் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கினார். சில வழக்குகளிலும் அவர் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான லியோ படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனிடையே அவரது நடிப்பில் வெளியான சரக்கு படம் வந்த வேகத்தில் திரும்பியது.
உதயநிதி கட்டுப்பாட்டில் சினிமா: இதனிடையே இன்றைய தினம் அவர் கொடுத்துள்ள பேட்டியில் தமிழ் சினிமா உதயநிதி கைகளில் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இயக்குநர் சங்கம், புரொட்யூர் யூனியன் உள்ளிட்ட அனைத்து அவரது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் தன்னுடைய சரக்கு படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தான் பல சிக்கல்களில் சிக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உதயநிதியை சந்தித்து இது குறித்து பேச தான் முயன்றதாகவும் ஆனால் தன்னுடைய முயற்சி பலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக தேர்தலையொட்டி தான் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 கோடி ரூபாய் நஷ்டம்: தன்னுடைய சரக்கு படத்திற்காக 4 கோடி ரூபாய் தான் செலவிட்டதாகவும் உதயநிதியால் தனக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அடுத்ததாக தேர்தலையொட்டி தன்னுடைய கவனம் திரும்பியுள்ளதாகவும் முன்னணி கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்வகையில் புறாவிடு தூது, காகம் விடு தூது, எலிவிடு தூது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொண்டுள்ளதாகவும் எருமையை மட்டும் விட்டுவிட்டதாகவும் அவர் தனக்கேயுரிய ஸ்டைலில் பேசியுள்ளார். பல கதவுகள் திறக்கவில்லை என்றும் தாங்கள் கதவுகளை உடைப்போம் திறப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாகவும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களிலும் போட்டியிட தங்களது கட்சியினர் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பைட்டர், நடன கலைஞர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளுடன் கோலிவுட்டில் பல ஆண்டு காலங்களாக செயல்பட்டு வரும் மன்சூர் அலிகான், தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, வலினா, பாக்யராஜ், கேஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது சரக்கு படம்.


Click it and Unblock the Notifications











