எங்க போய் முடியபோகுதோ?.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை சண்டைக்கு இழுக்கும் மன்சூர் அலிகான்
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக இருந்து, பல வெள்ளி விழாப் படங்களின் கதாநாயகனாக நடித்தவர். இவர் சினிமாவில் உச்சநட்சத்திரமாக மாறிய பின்னர், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகரில் இருந்து லைட் மேன் வரை அனைவருக்கும் ஒரேமாதிரி உணவு, அதுவும் அன்லிமிட்டேட் உணவு போட்டவர் விஜயகாந்த்தான். இதற்காக தனது சம்பளத்தில் இருந்து கனிசமாக ஒதுக்கியவர். சினிமாத்துறையிலும் சரி, அதன் பின்னர் அவர் காலடி எடுத்து வைத்த அரசியல் துறையிலும் சரி, கோலோச்சியவர் என்றே கூறலாம். விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் நடித்து வருகின்றார். சண்முகப்பாண்டியன் பெயரைக் குறிப்பிட்டு, நடிகர் மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையை வில்லன் நடிகராகத் தொடங்கியவர். இப்போதும் படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றார். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற, மக்களவைப் பொதுத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கி சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று, டெபாசிட் இழந்தது மட்டும் இல்லாமல், படுதோல்வியைச் சந்தித்தார்.

பொதுவெளியில் பேசும்போதுகூட மிகவும் வெளிப்படையாகப் பேசுகின்றேன் என கவனம் ஈர்க்கும் வகையில் பேசுகின்றார் அல்லது நடந்து கொள்கின்றார் என்ற விமர்சனம் அவர்மீது உள்ளது. வேலூரில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதுகூட, வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது என தன்மீது தானே தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.

விஜயகாந்த்: இவர் மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் சிறப்பான நடிப்பினையே வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் சொல்லப்போனால், பொதுவாகவே சினிமாவில் பல நடிகர்களுக்கு மைல் கல் படங்கள் அதாவது 25வது, 50வது, 100வது படங்கள் வெற்றி பெறாது. அப்படி இருக்கும்போது, விஜயகாந்த், தனது 100வது படத்தினை இளம் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை இயக்கச் சொன்னார். இந்தப் படம் மாபெரும் வெற்றியும் பெற்றது.

இரண்டாம் பாகம்: இன்னும் சொல்லப்போனால் படம் வெள்ளி விழா கொண்டாடியது. இந்தப் படம் 1991ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. 90களில் வெளியான பல படங்களை இரண்டாம் பாகம் எடுக்கலாம் என சில மூத்த நடிகர்கள், முயற்சி செய்கின்றனர். இதுமட்டும் இல்லாமல், சிலர் தங்களின் பழைய படங்களின் பெயர்களில் புதுப் படங்களையும் ரிலீஸ் செய்கின்றனர்.

சண்முக பாண்டியன்: இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், தான் குதிரையில் செல்லும் வீடியோவைப் பகிர்ந்து அதில், "கேப்டன் பிரபாகரன் 2-க்கு நான் ரெடி. சண்முகப்பாண்டியன் ரெடியா Come On.. ஆனால் ஆர்.கே. செல்வமணிதான் இயக்குநர்" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் கேப்டன் பிரபாகரன் 2 படம் உருவானால் விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் எனவும் சிலர் பேசி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











