56 வயசெல்லாம் சாகுற வயசா.. ஜெயிலருக்காக ராஜஸ்தான் வெயிலில் எல்லாம் கஷ்டப்பட்டு நடித்த மாரிமுத்து!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலுக்காக இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் மாரிமுத்து உயிரிழந்தது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாரிமுத்து நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லன் விநாயகத்தின் கூட்டாளியாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் மாரிமுத்து. இந்நிலையில் அவரது மறைவு செய்தி மனதை உலுக்குவதாக இயக்குநர் நெல்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் உடலுக்கு திரை பிரபலங்களை தாண்டி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செய்து வருகின்றனர். 56 வயது எல்லாம் சாகக் கூடிய வயதா என தலையிலும் மாரிலும் அடித்துக்கொண்டு பொதுமக்கள் கதறுவது பலரையும் உலுக்கியுள்ளது.
ஜெயிலர் படத்தில் கஷ்டப்பட்டு நடித்தார்: கடைசியாக ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து அந்தப் படத்தின் ப்ரீ கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக படக்குழுவுடன் ராஜஸ்தான் சென்றிருந்தார். கடும் வெயிலில் நடிகர் ரஜினிகாந்த் கஷ்டப்பட்டு நடித்ததைப் போலவே நடிகர் மாரிமுத்துவும் கஷ்டத்தை பொறுத்துக் கொண்டு நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல்களில் அல்லும் பகலும் இடைவிடாது நடித்து வந்த நிலையில் தான் மாரிமுத்து மறைந்துவிட்டார் என்ன அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியன் 2விலும் மாரிமுத்து: ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தில் மட்டுமின்றி விரைவில் வெளியாக உள்ள கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியன் 2வில் நடித்த விவேக், நெடுமுடி வேணு என பலர் உயிரிழந்த நிலையில், தற்போது மாரிமுத்துவும் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டார். மேலும், சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிதாக கட்டி வரும் வீட்டில் குடிபுக கூட முடியாமல் இப்படி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாரே என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும், சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியல் குடும்பமே தற்போது மாரிமுத்துவின் இறுதிச்சடங்கில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











