SJ Surya - முதல்முறையாக லட்சங்களில் அட்வான்ஸ்.. எஸ்.ஜே.சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: SJ surya (எஸ்.ஜே.சூர்யா) இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறை லட்சங்களில் அட்வான்ஸ் வாங்கிய பிறகு செய்த செயலை நடிகர் மாரிமுத்து பகிர்ந்திருக்கிறார்.
கோலிவுட் இயக்குநர்களில் முக்கியமானவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவை. தற்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கி சினிமாவில் நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இசை என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்துக்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.

எஸ்.ஜே.சூர்யா: இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அஜித் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் வாலி படம் அவரது கெரியரில் தி பெஸ்ட் படங்களில் ஒன்று. இப்போது வில்லத்தனத்தில் கலக்கிவரும் அஜித் வில்லனாக நடித்த முதல் படம் வாலி. இரட்டை வேட படங்களில் வித்தியாசமான படமும் வாலிதான்.
மெகா ஹிட்டான வாலி: ட்வின்ஸ் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு காதலையும், சிறிது காமத்தையும் கலந்து உருவாக்கப்பட்டிருந்தது வாலி. தம்பியின் மனைவியை அடைய நினைக்கும் அண்ணன் செய்யும் காரியங்களை த்ரில்லராகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் வெளியான சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வாலி திரைப்படம் மெகா ஹிட்டானது.
குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். காதலர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் இன்றுவரை க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக படத்தில் இதுதான் நடக்கப்போகிறது என டைட்டில் கார்டிலேயே கதையை கூறிய எஸ்.ஜே.சூர்யாவின் தைரியம் பரவலாக பேசப்பட்டது.
லட்சங்களில் அட்வான்ஸ்: இந்நிலையில் குஷி படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அட்வான்ஸ் வாங்கிய எஸ்.ஜே.சூர்யா அதை தனது உதவி இயக்குநர்களுக்காக செலவழித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அவரிடம் உதவி இயக்குநராக இருந்த மாரிமுத்து (எதிர்நீச்சல் குணசேகரன்) அளித்த ஒரு பேட்டியில், "எஸ்.ஜே.சூர்யா குஷி படத்துக்காக சில லட்சங்களை முதல்முறையாக அட்வான்ஸாக வாங்கினார்.

சூர்யா செய்த செயல்: நானாக இருந்திருந்தால் அவ்வளவு பெரிய தொகையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றிருப்பேன். ஆனால் அவரோ அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு பைக் ஷோரூமுக்கு சென்று அவரிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸுக்கும், எனக்கு உள்ளிட்ட ஏழு பேருக்கு புதிய பைக்குகளை வாங்கிக்கொடுத்தார். அந்த அளவுக்கு அவர் நல்லவர். அந்த மனதெல்லாம் யாருக்கும் வராது" என்றார்.
நடிப்பில் மிரட்டும் சூர்யா: கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வந்தாலும் இப்போது தீவிரமாக நடித்துவருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மாநாடு படத்தில் அவரது நடிப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இப்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் மெயின் வில்லனே எஸ்.ஜே.சூர்யாதான் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











