வாலியில் எஸ்.ஜே.சூர்யா யோசித்த மாஸ் சீன்.. ஒத்துழைக்க மறுத்த அஜித்
சென்னை: அஜித் நடித்த வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யா யோசித்த சூப்பர் சீன் குறித்தும் அதற்கு அஜித் ஒத்துழைக்க மறுத்தது குறித்தும் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட் இயக்குநர்களில் முக்கியமானவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவை. தற்போது இயக்கத்தில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இசை என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்துக்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.

வாலியில் மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா
இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அஜித் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் வாலி படம் அவரது கேரியரில் தி பெஸ்ட் படங்களில் ஒன்று. இப்போது வில்லத்தனத்தில் கலக்கிவரும் அஜித் வில்லனாக நடித்த முதல் படம் வாலி. இரட்டை வேட படங்களில் வித்தியாசமான படமும் வாலிதான்.

மெகா ஹிட்டான வாலி
ட்வின்ஸ் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு காதலையும், சிறிது காமத்தையும் கலந்து உருவாக்கப்பட்டிருந்தது வாலி. தம்பியின் மனைவியை அடைய நினைக்கும் அண்ணன் செய்யும் காரியங்களை த்ரில்லராகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் வெளியான சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வாலி திரைப்படம் மெகா ஹிட்டானது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு கார் பரிசளித்த அஜித்குமார்
படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து உற்சாகமான அஜித்குமார் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு கார் ஒன்றையும் பரிசளித்தார். மேலும், இந்தப் படம் ஆரம்பிக்கும்போது ஒரு புதுமுக இயக்குநரை நம்பி எதற்காக அஜித் ரிஸ்க் எடுக்கிறார் என பலரும் பேச அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அஜித் தைரியமாக இந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல், அனைவரிடமும் இவர்தான் என்னுடைய அடுத்த பட இயக்குநர் என சூர்யாவை அறிமுகப்படுத்துவாராம். இதை எஸ்.ஜே.சூர்யாவே பல மேடைகளில் பகிர்ந்திருக்கிறார்.

சூப்பர் சீன் யோசித்த எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில் நடிகர் மாரிமுத்து அளித்த பேட்டி ஒன்றில் வாலி படம் குறித்து ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "வாலி படத்தில் ஹீரோ என்று நினைத்து ஹீரோவின் அண்ணனை ஹீரோயின் கட்டிப்பிடிப்பார். இதனால் மிகவும் அப்செட்டாகி படுத்திருப்பார் ஹீரோயின்.
ஒரு உருவம் கதவை திறந்துகொண்டு தொப்பியை வைத்து முகத்தை மறைத்து அந்த அறைக்குள் வரும். அந்த உருவம் அஜித் தான் என்று ரசிகர்களுக்கு புரியும். அந்த உருவம் வர வர ஒருவேளை அண்ணன் அஜித் தான் வருகிறானோ என ஹீரோயினுக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.

ட்விஸ்ட் வைத்த எஸ்.ஜே.சூர்யா
பக்கத்தில் வந்து தொப்பியை கழற்றி முகத்தை காண்பிக்கும்போது தனது மீசையை எடுத்திருப்பான் ஹீரோ. எப்படி இருக்கு என ஹீரோயினிடம் கேட்பான். அதற்கு பிறகுதான் ஹீரோயினுக்கு நிம்மதி கிடைக்கும்.
பிறகு ஏன் மீசையை எடுத்த என்று ஹீரோயின் கேட்க உனக்காகத்தான் எடுத்தேன். மீசை இல்லாமல் இருந்தால் நான். மீசையோடு இருந்தால் அண்ணன். இனி உனக்கு வித்தியாசம் தெரிந்துவிடும் என்று கூறுவான் ஹீரோ. இதனை கேட்டதும் ஹீரோ மீது ஹீரோயினுக்கு காதல் மேலும் பெருகிவிடும்.
அதற்கு அடுத்ததாக வா இந்த விஷயத்தை அண்ணனிடம் சொல்வோம் என்று ஹீரோயினை அழைத்து செல்வார் ஹீரோ. அங்கு சென்றதும் கார் துடைத்துக்கொண்டிருக்கும் அண்ணன் அஜித்தை ஹீரோ அஜித், 'அண்ணன் என்று அழைப்பார். உடனே அவர் திரும்பியபோது அவரும் மீசையை எடுத்திருப்பார்.
இதனை பார்த்த ஹீரோ அஜித் துள்ளிக்குதித்து நான் யோசித்த மாதிரிதான் நீயும் யோசிச்சியா என கேட்பான். அதற்கு அண்ணன் அஜித் ஆமாம் என சொல்லி சிக்லெட்டை எடுத்து வாயில் போட்டுக்கொள்வான்.

அஜித் ஒத்துழைக்காததால் இந்த சீனை எடுக்கவில்லை
இந்த சீனை எஸ்.ஜே.சூர்யா ஷூட் செய்யவில்லை. அஜித் வாலி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது இன்னொரு படத்திலும் நடித்ததால் அவரால் மீசையை எடுக்க முடியவில்லை" என மாரிமுத்து கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எஸ்.ஜே.சூர்யாவை ஏகத்துக்கும் புகழந்துவருகின்றனர். மேலும் இந்த வீடியோவை எஸ்.ஜே.சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











