Marimuthu: கடவுள் மறுப்பாளராக வாழ்ந்த மாரிமுத்து.. ஆனால், வீட்டில் இந்த சாமியை மட்டும் கும்பிடுவாரு!
சென்னை: நல்ல மனசுக்காரரான மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மறைந்தது ஒட்டுமொத்த திரையுலகத்திற்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்குமே மிகப்பெரிய பேரிழப்பாக மாறி உள்ளது.
சன் டிவியின் டாப் சீரியலான எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக ஆணாதிக்கம் பிடித்தவராக தனது கொள்கைக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மாரிமுத்து கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம் அப்போ உங்க வீட்டில் ஒரு சாமி போட்டோ இருக்கே என கேள்வி எழுப்ப அதற்கும் தனது பாணியில் பதிலளித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தார் மாரிமுத்து.
கஷ்டப்பட்டு சினிமாவில் சாதித்தவர்: சொந்த ஊரில் இருந்து சினிமா ஆசையால் சென்னைக்கு ஓடி வந்த மாரிமுத்து பல நாட்கள் உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டுக் கிடந்த நிலையில், ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலைக்கு சேர்ந்து ரொம்பவே கஷ்டப்பட்டு எப்படியாவது தனது லட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என சினிமாவுக்குள் படிப்படியாக உள்ளே நுழைந்து இயக்குநராகவும் நடிகராகவும் மாறிய மாரிமுத்துவின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடவுள் மறுப்பாளர்: கண்ணும் கண்ணும், புலிவால் படங்களை இயக்கிய மாரிமுத்து எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி படத்தில் தான் நடிகராகவே அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்து விட்டு இயக்குநராக கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய நிலையில், அதன் பின்னர் நடிக்க வேண்டாம் என்கிற முடிவில் இருந்தவரை மீண்டும் மிஷ்கின் தான் நடிங்க எனக்கூறி யுத்தம் செய் படத்தில் நடிக்க வைத்தார்.
கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வந்த மாரிமுத்து வெளிப்படையாகவும் பல இடங்களில் அது பற்றி பேசியுள்ளார். தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோசியம் பற்றி அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
குலதெய்வ வழிபாடு: மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி எல்லா தெய்வங்களையும் வழிபடக்கூடியவர். ஆனால், மாரிமுத்துவை போலவே அவரது இரு குழந்தைகளும் கடவுள் மறுப்பாளர்களாகவே மாறிவிட்டனர் என பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அப்போது வீட்டில் ஒரு சாமி படம் இருக்கே என தொகுப்பாளர் கேட்க அது என் குலதெய்வம் செந்தட்டி அய்யனார். அது என் தாத்தா.. குலதெய்வம் கோயிலுக்கு வருஷா வருஷம் குடும்பத்தோட போயிட்டு வருவேன் எனக் கூறியிருந்தார்.
நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள் அவர் பேசிய பல பேட்டிகளை #Marimuthu ஹாஷ்டேக்கில் பதிவிட்டு இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











