வீட்டை விற்கும் நிலையில் இருந்த விஜய் குடும்பம்.. ஓடி வந்து உதவிய விஜயகாந்த்.. உண்மை வள்ளல் கேப்டன்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
நுரையீரல் அழற்சி காரணமாக நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் தள்ளியுள்ளது. நல்ல மனிதர் போய்விட்டாரே; உதவும் குணம் படைத்த ஒருவரு போய்விட்டாரே என்று பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவருகின்றனர். திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்துகின்றனர்.

விஜய் நேரில் அஞ்சலி: விஜயகாந்த்தின் இறப்பை தெரிந்துகொண்ட விஜய் தளபதி 68 ஷூடிங்கை கேன்சல் செய்துவிட்டு நள்ளிரவு சென்னைக்கு வந்து தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சில நொடிகள் விஜயகாந்த்தின் உடலை பார்த்தபடியே நின்ற விஜய் ஒருகட்டத்தில் கண் கலங்கிவிட்டார். அது அங்கிருந்த ரசிகர்களையும், குடும்பத்தினரையும் மேற்கொண்டு உருக செய்தது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதி நன்றி மறந்தவர் இல்லை என கமெண்ட்ஸ் செய்தனர்.
செந்தூரப்பாண்டி: விஜய் தனது கரியரின் ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவரது வளர்ச்சிக்காக விஜயகாந்த் உறுதுணையாக இருந்தார். அதுவும் தன்னுடைய 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி மெகா ஹிட்டடித்தது. அதற்கு அடுத்து அவர் நடித்த படங்களும் மெகா ஹிட்டானது. ஆனால் அந்தக்காலக்கட்டத்தில் விஜய்க்காக செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார் விஜயகாந்த். அதன் மூலம் விஜய்க்கு பிரபல்யம் கிடைத்தது. 100ஆவது படம் மெகா ஹிட்டாகிவிட்டால் எந்த ஹீரோவும் வளர்ந்துவரும் ஹீரோவுக்காக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கமாட்டார். ஏன் விஜய்யே அதை செய்வார் என்பதற்கு உறுதியில்லை.
மீசை ராஜேந்திரன் பேட்டி: இந்நிலையில் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்தது குறித்து அவரது தீவிர அபிமானியான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கேப்டன் டிவி ஆரம்பித்தபோது விஜய்யின் அலுவலகத்துக்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
வீட்டை விற்க முடிவெடுத்த விஜய் குடும்பம்: அப்போது விஜய் என்னிடம், எங்க அப்பா சில படங்கள் எடுத்து 40லிருந்து 45 லட்சம் ரூபாய்வரை நஷ்டம் அடைந்துவிட்டார். அப்போது எங்களுக்கு இரண்டு வழிகள்தான் இருந்தது. ஒன்று ஒரு படம் எடுத்து அந்த கடனை அடைக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டும். அதனை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனடியாக எங்களுக்கு டேட் கொடுத்தார் என கூறினார். விஜயகாந்த்தும் இதை என்னிடம் சொல்லியிருக்கிறார். எந்த ஹீரோவும் அப்படி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டார்” என்றார்.
இறுதிச்சடங்கு: விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. அங்கு ஒரு இடத்தில் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் விஜயகாந்த் குடும்பம் உட்பட 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











