Mohanlal: ராணுவ சீருடையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மோகன்லால் ஆய்வு.. 3 கோடி நிவாரண நிதி அறிவிப்பு!
முண்டகை: நடிகர் மோகன்லால் கேரளாவின் முன்னணி நடிகராக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கேரளாவின் வயநாடு உள்ளிட்ட இடங்களில் கனமழை மற்றும் அதையொட்டி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சூழலில் இன்றைய தினம் ராணுவ சீருடையில் பாதிக்கப்பட்ட இடங்களில் நடிகர் மோகன்லால் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக 25 லட்சம் ரூபாயை அவர் நிவாரண உதவியாக அறிவித்த நிலையில் இன்றைய தினம் 3 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லால்: கேரளாவின் வயநாடு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளுக்காக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசுகள் மற்றும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து சூர்யா, ஜோதிகா, கார்த்தி, கமல்ஹாசன், விக்ரம், நயன்தாரா உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து நிவாரண உதவியை கொடுத்து வருகின்றனர்.
3 கோடி நிவாரண உதவி: மோகன்லால் 3 கோடி நிவாரணம் அறிவிப்பு: இந்த நிலச்சரிவில் பள்ளிகள் உள்ளிட்டவையும் புதைந்த நிலையில் பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் மோகன்லால் ராணுவ சீருடையில் முண்டக்கை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசு இந்த கடினமான நேரத்தில் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய விஷ்ணுசாந்தி அறக்கட்டளை சார்பில் மூன்று கோடி ரூபாய் நிவாரண உதவிகளை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முண்டகையில் பாதிக்கப்பட்ட பள்ளியை கட்டித் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராணுவ முகாமிலும் ஆய்வு: மேப்பாடியில் உள்ள ராணுவ முகாமிலும் மோகன்லால் ஆய்வு மேற்கொண்டார். மீட்பு பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். 25 லட்சம் ரூபாயை அவர் நிவாரண உதவியாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அவர் ராணுவ உடையில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது குறித்து கேள்வி எழுந்தது. முன்னதாக Indian territorial armyயின் கவுர பதவியாக லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் ராணுவ சீருடையில் வயநாட்டில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முகாம்களில் மக்கள்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன மேலும் 206 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











